/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உழவர்சந்தையை கடமைக்கு திறப்பதால் அரசு நிதி வீண்
/
உழவர்சந்தையை கடமைக்கு திறப்பதால் அரசு நிதி வீண்
ADDED : ஜூன் 28, 2024 12:22 AM

வேடசந்துார்: வேடசந்துாரில் உழவர் சந்தை துவக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் எந்த செயல்பாடும் இன்றி வெறுமனே திறந்து வைத்து செயல்படுவது போல் காட்டுகின்றனர். இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. விவசாயிகள் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தி உழவர் சந்தையை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் இல்லையேல் இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வேடசந்துார் சட்டசபை தொகுதியில் உழவர் சந்தை எதுவும் இல்லாத நிலையில் உற்பத்தி காய்கறிகளை நியாயமான விலைக்கு விற்க வழியில்லாமல் குறைந்த விலைக்கு விற்று வருவதாக தொடர்ந்து குமுறல் எழுந்து வந்தது. இதைத் தொடர்ந்து 2022 ல் வேடசந்துார் ஞாயிறு வார சந்தையின் ஒரு பகுதியில் உழவர் சந்தை துவக்கப்பட்டது. உழவர் சந்தை துவங்கிய தகவல் விவசாயிகள் ,பொதுமக்களுக்கு முறையாக செல்லாததால் விவசாயிகளும் விற்பனைக்கான காய்கறிகளை கொண்டு வருவதில்லை. இப்பகுதி பொதுமக்களும் உழவர் சந்தைக்கு செல்வதில்லை என்ற நிலையில் இன்று வரை உள்ளனர்.
உழவர் சந்தை துவங்கிய சில மாதங்கள் ஐந்து கடைகளில் வியாபாரிகளை அழைத்து வந்து காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்து பார்த்தனர். வியாபாரம் ஆகாததால் எந்த வியாபாரியும் உழவர் சந்தைக்கு வருவதில்லை. இதனால் இங்குள்ள ஊழியர்களே ஒரு சில கடைகளில் வெங்காயம் உள்ளிட்ட பொருட்களை வைத்து வியாபாரம் நடப்பது போல் காட்டி வந்தனர். தற்போது அதுவும் இன்றி ஒரே ஒரு கடையில் இரண்டு கிலோ வெங்காயத்தை வைத்து உழவர் சந்தை நடப்பதாக காட்டுகின்றனர்.
நவீன வசதிகளுடன் துவக்கப்பட்ட இந்த உழவர் சந்தையில் ஒரு அலுவலகம், 16 கடைகள், குளிர்சாதன கிட்டங்கி, தண்ணீர் வசதி கழிப்பறை வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஒரு நிர்வாகி, 2 பாதுகாவலர்கள், ஒரு பெண் ஊழியர் உள்ளனர் . பேரூராட்சி பகுதியில் முக்கிய ரோட்டோரங்களில் காய் வியாபாரத்தை பலர் பார்த்து வருகின்றனர். இவர்களை அழைத்து உழவர் சந்தைக்குள் மதியம் ஒரு மணி வரை மட்டும் கடை நடத்த வலியுறுத்த வேண்டும், பிறகு தாங்கள் வைத்துள்ள இடங்களில் கடை வைத்துக் கொள்ளலாம் . இல்லையேல் பொது இடங்களில் கடைகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மூடு விழாவை நோக்கி
த.ராமசாமி, குடகனாறு பாதுகாப்பு சங்கம், வேடசந்துார்: விவசாயிகள் , பொதுமக்களின் நலன் கருதி வேடசந்துாரில் உழவர் சந்தை அமைக்க அமைச்சர் , கலெக்டரிடம் மனு கொடுத்தோம். 3 மாத காலத்தில் உழவர் சந்தை அமைக்க உத்தரவு கிடைத்தது. உழவர் சந்தைக்கான இடம் தேர்வை முறையாக செய்யவில்லை.
எங்களுக்கு தகவலை தெரிவிக்காமல் பூமி பூஜை போட்டனர். அதே போல் விவசாயிகளுக்கு முறையான தகவலை சொல்லாமல் ஆளும் நிர்வாகிகளே உழவர் சந்தையை திறந்து வைத்தனர். அதோடு அவர்கள் வேலை முடிந்தது. விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் முறையான தகவலை தெரிவிக்காததால் உழவர் சந்தை மூடு விழாவை நோக்கி செல்கிறது.
முடக்கத்தால் வருத்தம்
ஆர்.செல்வம்,பொருளாளர், விவசாயிகள் நலச் சங்கம், வேடசந்துார்: உழவர் சந்தை திறந்த விஷயம் விவசாயிகளுக்கோ, பொதுமக்களுக்கோ சென்றடைய வில்லை. இதனால் உழவர் சந்தைக்கு யாரும் செல்வதில்லை. தற்போது செயல்படாமல் முடங்கி கிடப்பது வருத்தம் அளிக்கிறது. இனிமேலாவது உழவர் சந்தை நிர்வாகிகள், வேளாண் துறை, விவசாய சங்க நிர்வாகிகள் இணைந்து, ஓர் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தி உழவர் சந்தையை மீண்டும் உயிர்ப்போடு செயல்படுத்த முன்வர வேண்டும் .
கண்துடைப்பாக நடக்கிறது
எம்.பாபுசேட், அ.தி.மு.க., நகர செயலாளர், வேடசந்துார்: வ உழவர் சந்தையை திறப்பது குறித்து யாருக்கும் முறையான தகவல் தெரிவிக்காமல் திறந்த நிலையில் முடங்கி கிடக்கிறது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. செயல்படாத உழவர் சந்தைக்கு அதிகாரி , ஊழியர் என நான்கு பேர் இருப்பதாலும் அரசின் நிதி தொடர்ந்து வீணடிக்கப்படுகிறது.
உழவர் சந்தை கடைகள் செயல்படாத நிலையில் இரண்டு, மூன்று கிலோ வெங்காயத்தை வைத்துக்கொண்டு கண்துடைப்பாக உழவர் சந்தையை நடத்துகின்றனர். மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது. மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உழவர் சந்தையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் .