/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரத்து குறைவால் விலை உயர்ந்த வாழைத்தார்; ரூ.1200க்கு விற்பனை
/
வரத்து குறைவால் விலை உயர்ந்த வாழைத்தார்; ரூ.1200க்கு விற்பனை
வரத்து குறைவால் விலை உயர்ந்த வாழைத்தார்; ரூ.1200க்கு விற்பனை
வரத்து குறைவால் விலை உயர்ந்த வாழைத்தார்; ரூ.1200க்கு விற்பனை
ADDED : செப் 20, 2024 06:12 AM

திண்டுக்கல்: வெயிலின் தாக்கத்தால் வாழைத்தார்களின் வரத்து குறைய இதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது ஒரு தார் ரூ.1200 க்கு விற்பனையாகிறது .
திண்டுக்கல் மாவட்டத்தில் சுரக்காப்பட்டி, குட்டத்துப்பட்டி, மல்லனபுரம், மைலாப்பூர், ஆத்துார், சாணார்பட்டி உள்ளிட்ட பகுதகளில் அதிகளவில் வாழை விளைவிக்கப்படுகிறது.
இங்கு விளைவிக்கப்படும் நாட்டுப்பழம், ரஸ்தாளிப்பழம், செவ்வாழை போன்ற வாழைத்தார்கள் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சிறுமலை பழ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு வியாபாரிகள் மத்தியில் ஏலம் விடப்படுகிறது.
இங்கு வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வருவர் . தினமும் 6000 வாழைத்தார்கள் வரை விற்பனைக்கு வரும் நிலையில் தற்போது பாதியாக குறைந்து 3000 வாழைதார்கள் மட்டுமே வருகின்றன.
இதனால் ரூ.700 க்கு விற்பனையான செவ்வாழை ரூ.1200 ,ரஸ்தாளிப்பழம் ரூ.600 க்கு விற்ற நிலையில் ரூ.1100, நாட்டுப்பழம் ரூ.300 க்கு விற்ற நிலையில் ரூ.550 க்கு விற்பனையானது.
இவை சில்லரை விற்பனை கடைகளுக்கு வரும் போது நாட்டுப்பழம், ரஸ்தாளி ஒரு பழம் ரூ.6 முதல் ரூ.10 , செவ்வாழை ஒன்று ரூ. 15 முதல் ரூ. 20 வரை விற்கப்படுகிறது.
சிறுமலை பழ மார்கெட் செயலாளர் பாண்டி கூறுகையில்,'' திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளில் இருந்து அதிகளவில் வாழைத்தார் விற்பனைக்கு வருவது வழக்கம்.
ஆனால் நேற்று வரத்து பகுதியாக குறைந்து விட்டது. இனி மழை பெய்தாலும் ஒரிரு மாதங்கள் பின்தான் வரத்து கணிசமாக உயரும். அதுவரையில் இதே விலையே தொடரும்'' என்றார்.