UPDATED : ஜூலை 18, 2026 10:39 PM
ADDED : ஜூலை 18, 2026 10:25 PM
ஒட்டன்சத்திரம்:காற்றாடி காலம் தொடங்கிய நிலையில் பராமரிப்பின்றி கீழே விழும் நிலையில் ரோடுகளின் நடுவில் உள்ள விளம்பர போர்டுகள், பேனர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து நிறைந்த, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் மெதுவாக செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு நிறுவனங்களின் இருப்பிடத்தை காட்டும் வகையில் அவற்றின் பெயர்கள் தாங்கிய பேனர்கள் வழிகாட்டிகளாக வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
மழை, வெயிலால் பாதிப்பிற்கு உள்ளாகும் இந்த போர்டுகள் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளன. ஆடி மாதத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் பேனர்களை அப்புறப்படுத்தாவிட்டால் ரோட்டில் செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பேனர்கள், போர்டுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். போதிய பராமரிப்பு இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
இதேபோல் கட்டடங்களில் மேல் வைக்கப்பட்டு பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ள விளம்பர பேனர்களையும் கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும்.
