/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விலை சரிவால் திராட்சை விவசாயிகள் விரக்தி : மாற்று வழி தெரியாமல் பரிதவிப்பு
/
விலை சரிவால் திராட்சை விவசாயிகள் விரக்தி : மாற்று வழி தெரியாமல் பரிதவிப்பு
விலை சரிவால் திராட்சை விவசாயிகள் விரக்தி : மாற்று வழி தெரியாமல் பரிதவிப்பு
விலை சரிவால் திராட்சை விவசாயிகள் விரக்தி : மாற்று வழி தெரியாமல் பரிதவிப்பு
ADDED : செப் 23, 2011 12:56 AM
சின்னாளபட்டி : சின்னாளபட்டி பகுதியில் விலை சரிந்ததால், திராட்சை விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
சாமியார்பட்டி, ஜாதிகவுண்டன்பட்டி, ஏ.வெள்ளோடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திராட்சை சாகுபடி நடக்கிறது. திராட்சை கொடி படர்வதற்காக முதற்கட்டமாக கற்கள் ஊன்றி,கம்பி பந்தல் அமைக்கப்படுகிறது. இதற்கு ஏக்கர் ஒன்றிற்கு 3 லட்ச ரூபாய் வரை செலவாகிறது. இதன் பின், திராட்சை குச்சிகள் குறிப்பிட்ட இடைவெளியில் நடப்படும். பந்தல்மீது கொடிபடர்ந்த பின், கருந்தலவு, கவாத்து, இரண்டு முறை நரம்பு கிள்ளுதல், இறுதியாக பிஞ்சு கட்டுதல் ஆகிய பணிகள் படிப்படியாக நடக்கின்றன. மூன்று மாதம் கழித்து திராட்சை விளைகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் பூச்சி மருந்து தெளிக்கப்படும். பழுக்கும் நிலை வந்தவுடன் திராட்சை வெட்டி எடுக்கப்படும். இந்த பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு, தினமும் 140 ரூபாய், ஆண்களுக்கு 210 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. அனைத்து செலவுகளும் சேர்த்து ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.
திராட்சை கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்றால் மட்டுமே, கணிசமான தொகை விவசாயிக்கு கிடைக்கும். மாறாக விலை சரிந்தால் நஷ்டம் ஏற்படும். தற்போது கிலோ 15 ரூபாய் விலை போவதால் திராட்சை சாகுபடி செய்த விவசாயிகள் 'ச்சீ..ச்சீ' இந்த பழம் புளிக்கும்' என, சலித்து போய் திராட்சை விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எம்.காம்., எம்.பி.ஏ., விற்பனை மேலாண்மையில் முதுநிலை பட்டயம் என, ஏராளமாக படித்து விவசாயம் பார்க்கும் இளைஞர் சுப்பிரமணி (சாமியார்பட்டி) கூறியது: விவசாயத்தின் மீது விருப்பம் கொண்டு, வேறு வேலைக்கு செல்ல முயற்சிக்கவில்லை. தற்போது ஆட்கள் பற்றாக்குறை, பராமரிப்பு செலவு அதிகரிப்பு, விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காதது போன்றவற்றால் விவசாயம் மிகவும் கடினமானதாகவும், நஷ்டம் தரக்கூடியதாகவும் மாறிவிட்டது. தற்போது திராட்சை விலை சரிவால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், என்றார்.