ADDED : மார் 02, 2026 07:20 AM

பழநி: பழநியில் 'தமிழ்நாடு தலைகுனியாது' எனும் தலைப்பில் தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில மருத்துவ அணி தலைவர் எம்.பி., கனிமொழி பங்கேற்றார். பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில் தனிநபர் வருமானம் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் உற்பத்தி சதவீதமும் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., பழனிசாமி தனது ஆட்சிக் காலத்தில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் தற்போது வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.
பழநியை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு கட்டிடப் பணிகள் நடந்து வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க பழநி தாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. கொடைக்கானலில் பல ஆண்டுகளாக சாலை இல்லாத பகுதிகளில் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகரச் செயலாளர் வேலுமணி, இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

