ADDED : நவ 28, 2024 06:12 AM
பாலசமுத்திரம்: பழநி பகுதியில் பெய்து வரும் மழையால் வரதமாநதி அணை, குதிரையாறு அணை நிரம்பி உள்ள நிலையில் பாலாறு-பொருந்தலாறு அணையில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழநி சுற்று பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள பாலாறு-பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை, குதிரையாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்டத்தின் பெரிய அணையான பாலாறு-பொருந்தலாறு அணை நேற்று (நவ.27) மாலை 5:30 மணிக்கு 62.76 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதை தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 727 கனஅடி நீர் வரத்து உள்ளது.
நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில் பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து சண்முக நதியில் தண்ணீர் திறந்து விடப்படும்.
இதனால் சண்முக நதி கரையோர பகுதிகளில் உள்ள பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.