/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பசுமை போர்வையை உருவாக்கிய நெடுஞ்சாலைத்துறை
/
பசுமை போர்வையை உருவாக்கிய நெடுஞ்சாலைத்துறை
ADDED : ஏப் 21, 2025 06:44 AM

ஒட்டன்சத்திரம் ரோட்டில் வழிநெடுக 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு, வளர்த்து பசுமை போர்வையை உருவாக்கியுள்ளனர் நெடுஞ்சாலைத்துறையினர்.
தமிழகத்தின் முக்கியமான, நெடுந்தூரம் கொண்ட ரோடுகளில் இருபுறமும் நிழல் தரும் புளிய மரங்களை முன்னோர்கள் வளர்த்து வந்தனர். காரணம் தற்போதுள்ள நவீன போக்குவரத்து வசதிகளை போல் அப்போது இல்லை என்பதால் நடை பயணத்தை மட்டுமே மக்கள் அதிகம் மேற்கொண்டனர்.
சற்று வசதி உள்ளவர்கள் மட்டுமே மாட்டு வண்டி காலப்போக்கில் மிதிவண்டி என பயன்படுத்தி வந்தனர். இதனால்தான் ரோட்டோரங்களில் ஏராளமான புளிய மரங்கள் அப்போது நடப்பட்டன. இன்றும் பல இடங்களில் நன்கு வளர்ந்த புளிய மரங்களை காணலாம்.
அதேபோல் வடமதுரை -வேடசந்தூர்- ஒட்டன்சத்திரம் ரோட்டிலும் நூற்றுக்கணக்கான புளிய மரங்கள் இருந்தன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரோடு விரிவாக்கப் பணியின் போது இந்த மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து வடமதுரை-வேடசந்தூர் -- ஒட்டன்சத்திரம் ரோட்டோரங்களில் குறிப்பாக மாநில நெடுஞ்சாலைகளில் எல்லாம் தமிழக அரசின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வழி நெடுகிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். வேடசந்தூர் எரியோடு ரோட்டில் தண்ணீர் பந்தம் பட்டி அருகே நூற்றுக்கணக்கான மரங்களை ஒரே இடத்தில் நடவு செய்து அத்தனை மரங்களையும் காயாமல் வளர்த்து இன்று தோப்பாக மாற்றி உள்ளனர். புங்கை, வேம்பு, வாகை, ஆவி மரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள், இங்கு வளர்ந்து பசுமை மாறாத காடுகளாய் காட்சியளிக்கின்றன. தனியார் மட்டுமே ஆங்காங்கே மரக்கன்றுகளை நட்டு வந்த நிலையில், தமிழக நெடுஞ்சாலைத்துறையினர் மரக்கன்றுகளை நட்டு தோப்பாக வளர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினேஷ் குமார், உதவி பொறியாளர், வேடசந்துார்: இந்தப் பகுதியில் ரோட்டோரங்களில் இருந்த புளிய மரங்கள் அகற்றப்பட்டதால் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு தனியார் மூலம் பராமரித்து வந்தனர். தற்போது ஒப்பந்தம் முடிந்து விட்டதால் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டனர். தாடிக்கொம்பு - இடையகோட்டை ரோட்டிலும் 600 மரக்கன்றுகள் நட்டுள்ளோம். வரும் மழைக் காலத்திலும் கூடுதலான மரக்கன்றுகளை நட தற்போதே தயாராகி வருகிறோம்

