ADDED : அக் 29, 2025 06:57 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் நடந்த கந்தசஷ்டி திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகர் கோயில், கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, மேட்டுராஜாக்கப்பட்டி சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், கூட்டுறவு நகர் செல்வவிநாயகர் கோயில்,குள்ளனம்பட்டி சுப்பிரமணிசுவாமி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா அக்.22ல் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மாலை சூரசம்ஹாரம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்குமலர்களுடன் திருமாங்கல்யம் வழங்கப்பட்டது
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள கோயிலை வலம் வந்தனர். பின்னர் விநாயகர் சன்னதி முன்பு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கோயில் மண்டபத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமர முருகப்பெருமான்,- வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷமிட்டனர். பின்னர் திருமண கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பக்தர்கள் வேட்டி, பட்டு புடவை, பழங்கள், பூக்கள் என சுவாமிக்கு திருமண சீர்வரிசை பொருட்களை காணிக்கையாக செலுத்தினர்.
சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் சிவசுப்பிரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி திருவிழா திருக்கல்யாணம் நடந்தது.
வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு அபிஷேகம், தீபாராதனைகளுடன் புறப்பாடு நடந்தது.

