/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி
/
சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி
ADDED : மார் 09, 2024 09:16 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியையொட்டி நடந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் விடிய, விடிய பங்கேற்று தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் மேற்கு ரத வீதி சிவன் கோயில், ரயிலடி சித்தி விநாயகர் கோயில்களில் சிவன், நந்திக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு துவங்கி இன்று காலை 5:00 மணி வரை நான்கு கால பூஜைகள், சிறப்பு யாகம் நடந்தது. பக்தர்கள் விடிய, விடிய நடந்த சிறப்பு அலங்கார பூஜையில் பங்கேற்றனர். மணிக்கூண்டு வெள்ளை விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, நேருஜி நகர் நவசக்தி விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர் கோயிலில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கிராமங்களின் பல பகுதிகளில் குலதெய்வ கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்தி வழிபட்டனர். அனைத்து சிவாலய லிங்கத்திற்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடஜலபதி பெருமாள் கோயிலில் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிேஷகங்கள்,சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில் தேய்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. மூலவர், ஓம்கார நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கசவனம்பட்டி: மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், பிரதோஷ அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கத்திற்கு 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது.
நவாமரத்துப்பட்டிபுதுார் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடந்தது. சுற்று ப்பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வடமதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், அய்யலுார் களர்பட்டி ஆதிசிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர், பால், வீபதி உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பழநி : பழநி முருகன் கோயில், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில், கிழக்கு ரத வீதி, பெரியநாயகி அம்மன் கோயில், ஆயக்குடி, சோழீஸ்வரர் கோயில், கோதைமங்கலம், கோதீஸ்வரர் கோயில், பெரியாவுடையார் கோயில், கீரனுார் வாகீஸ்வரர் கோயில், சிவகிரிபட்டி இடும்பன் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் மஹா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. மூலவர்களுக்கு 16 வகையான அபிஷேகம் , நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. பாலசமுத்திரம், பொருந்தல் அமூதீஸ்வரர் கோயில், மதனபுரம், அண்ணாமலை உண்ணாமுலை நாயகி கோயிலில் மஹாசிவராத்திரி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

