/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சப்வே அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி
/
சப்வே அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 14, 2025 12:20 AM

வேடசந்துார்: திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலையில் காக்காத்தோப்பூர் அடுத்து சப்வே அமைக்காததால் வாகன ஓட்டிகள் 5 கி.மீ., சுற்றி செல்கின்றனர். இதனால் காலதாமதம் ஆவதுடன் பொருளாதார விரையமும் தொடர்கிறது. காக்காத்தோப்பூரில் மேம்பாலம் பணிகள் நடைபெறும் போதே சப்வே பணியையும் விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலை இருவழி சாலையாக இருந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழி சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி தங்களது பயணத்தை தொடர்ந்தாலும் முக்கிய இடங்களில் சப்வே பணிகள் முழுமை பெறாததால் பள்ளி கல்லுாரி வாகனங்கள் மட்டுமின்றி நுாற்பாலை வாகனங்களும் 5 கி.மீ., துாரம் தினமும் சுற்றிச் செல்லும் நிலை தொடர்கிறது.
திண்டுக்கல் கரூர் ரோட்டில் காக்காத்தோப்பூர் பிரிவுக்கு அடுத்து ஒட்டன்சத்திரம் ரோட்டில் செல்வதற்கான சப்வே வழி விடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் இன்னும் தார் ரோடு அமைக்காததால் மண் பாதையாகவே உள்ளது. சகதி நிறைந்து காணப்படுவதால் டூவீலர்கள் கூட செல்ல முடியவில்லை. சப்வேயை முறையாக அமைக்காததால் ஒட்டன்சத்திரம் ரோட்டில் இருந்து வந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் வேடசந்தூர் நகர் பகுதிக்கு சென்று சுற்றி செல்கின்றன.
இதே போல திண்டுக்கல் கரூர் ரோட்டில் வரும் வாகனங்கள் ஒட்டன்சத்திரம் ரோட்டில் செல்ல வேண்டுமாயின் சப்வே இல்லாததால் வேடசந்தூர் நகர் பகுதிக்குள் வந்து ஒட்டன்சத்திரம் ரோட்டில் செல்கின்றன. இதனால் ஆத்து மேடு நகர் பகுதி 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. சில நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பிக்க கடும் போக்குவரத்து நெருக்கடி வேறு ஏற்படுகிறது. வேடசந்துார் ஆத்து மேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைய வேண்டுமாயின் காக்காத் தோப்பூர் அருகே உள்ள சப்வேயை முழுமையாக வேலை பார்த்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
நேரமும் மிச்சமாகும்
இல.சக்திவேல், சமூக ஆர்வலர், வேடசந்துார்: திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றியமைக்கப்பட்ட போதே சப்வேயை முறைப்படி அமைத்திருக்க வேண்டும். ஆனால் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் இதை கிடப்பில் போட்டுள்ளது. நான்கு வழி சாலை அமைக்கப்பட்ட புதிதில் ஒவ்வொரு பஸ் ஸ்டாப் நிழற்குடை அருகிலேயும் மினி டேங்க் வைத்து குடிநீர் வசதி செய்யப்பட்டது. இந்தத் திட்டமும் செயல்பாட்டிற்கு வரவில்லை. காக்கா தோப்பூர் அருகே உள்ள சப்வேயை முறைப்படி அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் வேடசந்துார் நகர் பகுதிக்குள் போக்குவரத்து நெருக்கடி குறையும். வாகன ஓட்டிகளுக்கு நேரமும் மிச்சமாகும்.
நேர்வழியில் செல்ல வழி
ஆர்.சிவலிங்கம், ஒன்றிய அ.தி.மு.க., அம்மா பேரவை தலைவர்,வேடசந்துார் :கரூர் திண்டுக்கல் நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்பட்ட பிறகு போக்குவரத்து , வாகனங்களின் வேகம் அதிகரித்துள்ளது. காக்காத்தோப்பூர் பிரிவு ரோட்டில் மேம்பாலம் இல்லாததால் அடுத்தடுத்து விபத்துகளும், உயிரிழப்புக்களும் தொடர்கின்றன. இந்நிலையில் தற்போதுதான் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் காக்காத்தோப்பூர் பிரிவு அருகே ஒட்டன்சத்திரம் ரோட்டிற்கு செல்வதான சப்வே பணிகள் கிடப்பில் உள்ளன. இந்தப் பணியையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் விபத்துக்கள் குறையும். வாகன ஓட்டிகள் சுற்றி செல்லாமல் நேர்வழியில் செல்வர் என்றார்.