/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின் இணைப்பே இல்லை கட்டணம் செலுத்த குறுந்தகவல்
/
மின் இணைப்பே இல்லை கட்டணம் செலுத்த குறுந்தகவல்
ADDED : அக் 06, 2024 01:47 AM
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வழங்கப்படாத மின் இணைப்பிற்கு கட்டணம் செலுத்தும்படி வந்த குறுந்தகவலால் பெண் மில் தொழிலாளி அதிர்ச்சியடைந்தார்.
மோர்பட்டி ஊராட்சி பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்த மில் தொழிலாளி போசம்மாள். இவர் கட்டும் வீட்டுக்கு மே 2 மின் இணைப்பிற்கு விண்ணப்பித்து டெபாசிட் ரூ.5000 செலுத்தினார். இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அவரது அலைபேசிக்கு மின் இணைப்பு எண் விபரங்களுடன் வந்த குறுந்தகவலில் ரூ.9844 யை அக்.,3க்குள் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பதை தவிர்க்கவும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மின் இணைப்பு கிடைக்காமல் வீடு பணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறாமல் கிடப்பில் கிடக்கும் நிலையில் மின் கட்டண குறுந்தகவல் போசம்மாளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமதுரை மின்வாரிய உதவி பொறியாளர் மதனீஸ்வரன், ''குறுந்தகவல் தவறுதலாக சென்றுள்ளது. அதை சரிசெய்யும் பணி நடக்கிறது. விரைவில் போசம்மாள் வீட்டுக்கு மின் மீட்டர் பொருத்தப்படும்,'' என்றார்.