ADDED : ஆக 09, 2026 05:25 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசில் சரணடைந்த பத்திர எழுத்தரை ஆக.21 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பழநி அடிவாரம் தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான புகாரில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் 48, விழுப்புரம் சாலாமேடு அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் 56, நிலம் வாங்கிய திருப்பூர் பாப்பன்குளம் வெள்ளைத்துரை 60, பழநி சேதுபதி 67, வழக்கறிஞர் அன்வர்தீன் 65, ஆகிய நால்வரை கைது செய்தனர். முன்ஜாமின் நீட்டிப்பு ரத்தான நிலையில், கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே பதுங்கியிருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை ஆக.6ல் போலீசார் கைது செய்தனர். வழக்கில் தலைமறைவாக இருந்த ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ் 38, நேற்று முன்தினம் மாலை திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் சரணடைந்தார்.
அவரிடம் மோசடி பத்திரப்பதிவில் தொடர்புடைய பிற நபர்கள், ஆவண மோசடிக்கு உதவியவர்கள், கட்சி தொடர்பு உட்பட பல்வேறு கோணங்களில் எஸ்.பி., சஜிதா, டி.எஸ்.பி., அஜய்தங்கம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து ஜெயப்பிரகாஷை கைது செய்த போலீசார், திண்டுக்கல் 3ம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி (பொறுப்பு) முன் நேற்று ஆஜர்படுத்தினர்.
அப்போது ஜெயப்பிரகாஷை ஆக.21 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயப்பிரகாஷ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
