/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்
/
ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்
ADDED : செப் 29, 2025 05:07 AM
திண்டுக்கல் : பிரசவத்திற்காக நத்தத்திலிருந்து மதுரைக்கு சென்ற கர்ப்பிணிக்கு ஓடும் ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்தது.
நத்தம், மூங்கில்பட்டியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜா, இவரின் மனைவி சத்தியஜோதி 24. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்துக்காக வத்திபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு முதலுதவி அளித்து பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை பிறப்பதில் சிக்கல் இருப்பதை அறிந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.
அதன்படி, 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டார். வண்டியை டிரைவர் சின்ன அடைக்கண் ஓட்டினார். மருத்துவ உதவியாளராக சேகர் பணியிலிருந்தார். மந்திகுளம் பிரிவு அருகே சென்றபோது, சத்தியஜோதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மதுரை செல்லும் வழியில், சிறிதுநேரத்திலேயே அவருக்கு 2.700 கிலோ எடையில் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, தாயும், சேயும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.