ADDED : மார் 28, 2025 05:02 AM

திண்டுக்கல் : முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டவில்லை என கூறி திண்டுக்கல்லில் பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே ஆதிசிவன் கோயில் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு உயரமான பகுதி என்பதால் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை.
திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரி மூலமாக மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.10 நாள்களுக்கும் மேலாக லாரி மூலமாகவும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. அதிருப்தியடைந்த அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் மதுரை ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் தெற்கு போலீஸார், மாநகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.