ADDED : ஜன 30, 2024 06:50 AM
திண்டுக்கல் : 60 ஆண்டு காலமாக தொடக்கக் கல்வித் துறையில் நடைமுறையில் இருந்து வந்த ஒன்றிய முன்னுரிமையினை, மாநில முன்னுரிமையாக மாற்றி வெளியிடப்பட்ட அரசாணை 243-யை ரத்து செய்ய வேண்டும்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஏற்றுக் கொண்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின்(டிட்டோ ஜேக்) திண்டுக்கல் மாவட்டம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
திண்டுக்கல் - திருச்சி கல்லறைத் தோட்டம் அருகே நடந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர்கள் ஆர்தர் (தமிழக ஆசிரியர் கூட்டணி), கோபிநாதன்(தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி), பிரபாகரன்(தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி) உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.
டிட்டோ ஜேக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் வின்சென்ட் பால்ராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி துணைப்பொதுச்செயலர் கணேசன் நன்றி கூறினார்.