/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மஞ்சள் கிழங்கு செடிகள் பொங்கலுக்கு ரெடி
/
மஞ்சள் கிழங்கு செடிகள் பொங்கலுக்கு ரெடி
ADDED : ஜன 05, 2025 05:48 AM

பட்டிவீரன்பட்டி : - செங்கட்டாம்பட்டியில் பொங்கல் பண்டிகை அறுவடைக்காக மஞ்சள் கிழங்கு செடிகள் நன்கு விளைந்து தயார் நிலையில் உள்ளன.
பொங்கல் பண்டிகையில் மஞ்சள் கொத்து முக்கிய இடம் வகிக்கிறது. பொங்கல் பானைகளில் மஞ்சள் கிழங்கு செடிகளை கட்டி பொங்கல் வைப்பது வழக்கம். பட்டிவீரன்பட்டி அருகே நெல்லுார், ரெங்கராஜபுரம், செங்கட்டான்பட்டி, சுந்தரராஜபுரம், அய்யம்பட்டி, சாலைப்புதுார், நல்லாம்பிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் நுாற்றுக்கணக் கான ஏக்கரில் விவசாயிகள் மஞ்சள் கிழங்கு செடிகளை சாகுபடி செய்துள்ளனர்.
ஜன.14ல் பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போது மஞ்சள் கிழங்கு செடிகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.
பராமரிப்பு பணிகள், விலை குறைவு, நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் இப்பகுதி விவசாயிகள் சில ஆண்டுகளாக மஞ்சள் கிழங்கு செடிகள் பயிரிடாத விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறை இல்லாததாலும், போதிய விலை கிடைப்பதாலும் இந்த ஆண்டு மஞ்சள் கிழங்கு செடிகளை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
நெல்லுாரை சேர்ந்த விவசாயி ஜெயராஜ் கூறியதாவது: பொங்கல் பண்டிகை நேரத்தில் செடிகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் நன்கு விளைந்து கிழங்குகளுடன் இருக்கும்.
இந்த பருவத்தில் பறித்தால் பொங்கல் பண்டிகையின் போது பானைகளில் மங்கல பொருளாக கட்டி வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம். பொங்கல் நெருங்கி வரும் போது மொத்த வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து மஞ்சள் கிழங்கு செடிகளை மொத்தமாக வாங்கி செல்வர். பொங்கல் பண்டிகைக் கான தேவை முடிந்து மீதமுள்ள முழு வளர்ச்சியடைந்த மஞ்சள் கிழங்குகளை செடியிலிருந்து பிரித்து எடுக்கும் பணிகள் மார்ச் மாதத்தில் துவங்கும்.
அதன்பின்பு மஞ்சள் கிழங்குகளை அவித்து பக்குவபடுத்தி விதைக்கு போக அப்போதைய மார்க்கெட் நிலவரப்படி ஈரோடு மஞ்சள் மொத்த மார்க்கெட்டுக்கு அனுப்பி வைப்போம் என்றார்.