/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பரிதவிப்பு 100 நாள் பணியாளர்களுக்கு வரல சம்பளம் : வேலையின்றி தொழிலாளர்கள் பாதிப்பு
/
பரிதவிப்பு 100 நாள் பணியாளர்களுக்கு வரல சம்பளம் : வேலையின்றி தொழிலாளர்கள் பாதிப்பு
பரிதவிப்பு 100 நாள் பணியாளர்களுக்கு வரல சம்பளம் : வேலையின்றி தொழிலாளர்கள் பாதிப்பு
பரிதவிப்பு 100 நாள் பணியாளர்களுக்கு வரல சம்பளம் : வேலையின்றி தொழிலாளர்கள் பாதிப்பு
ADDED : மார் 13, 2026 06:56 AM

வேடசந்துார்:ஊராட்சிப் பகுதிகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஆறு வாரமாக சம்பளம் வழங்கவில்லை என்ற குமுறல் எழுந்துள்ளது. மேலும் கருவிழி பதிவு ஆகவில்லை என்ற காரணத்தை கூறி பலரை வீட்டுக்கு அனுப்புவதாகவும், வறட்சியான காலத்தில் விவசாய வேலைகளும் இன்றி சிரமப்படுவதாக தொழிலாளர்கள் புகார் எழுப்புகின்றனர்.
மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஊராட்சி வாரியாக குறைந்தது 300 பேர் முதல் 800 பேர் வரை வேலை பார்த்து வருகின்றனர். தினசரி பணியை பொறுத்து ரூ.339 வரை வழங்கப்படுகிறது. வரத்து வாய்க்கால் , குளம் துார்வாருதல், மண் சாலை அமைத்தல், ரோட்டு ஓரங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் விவசாய தொழிலாளர்களாக இருப்பதால் 100 நாள் வேலையை நம்பித்தான் குடும்பத்தை நடத்துகின்றனர். 100 நாள் வேலை திட்டத்தில் ஆறு வாரங்களாக சம்பளம் வழங்கவில்லை என்ற குமுறல் ஓங்கி ஒலிக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி நிலவும் நிலையில் விவசாய வேலைகளும் இல்லாததால் 100 நாள் வேலையை தான் நம்பி உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் இதுவரை பார்த்த வேலைக்கும் சம்பளம் வரவில்லை,
100 நாள் வேலையும் முறையாக கிடைக்கவில்லை. வேலை கிடைத்து பணிக்கு சென்றாலும் கருவிழி பதிவு ஒன்றை காலை, மதியம் என இரண்டு நேரங்களில் எடுக்கின்றனர். வயதான பலருக்கு அந்த கருவிழி பதிவு விழவில்லை என்பதால் 100 நாள் வேலைக்கும் செல்ல முடியவில்லை என புலம்பி தவிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக 100 நாள் வேலை திட்டத்திற்கான சம்பளத்தை முறையாக வழங்கவும், ஆன்லைன் பதிவு விஷயத்தில், அனைவருக்கும் கருவிழி பதிவு ஆகும் வகையில் ஆன்லைன் பணிகளை வேகமாக (ஸ்பீடாக) செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 200 பேர் கொண்ட ஒரு குழுவிற்கு அலைபேசியை வைத்து ஒரு முறை கருவிழி பதிவு எடுக்கவே குறைந்தது 2 மணி நேரம் ஆகிவிடுகிறது.
அடுத்து மதியம் அதேபோல் எடுக்க வேண்டும். இந்த திட்டத்தை ஏப்ரல் 1 முதல் மத்திய அரசு விக்சிட் பாரத் ஜி ராம் ஜி என்ற பெயர் மாற்றத்துடன் செயல்படுத்த உள்ளது. அப்போதாவது மேற்கண்ட குறைகளை தவிர்த்து முறைப்படுத்த வேண்டும். இதேபோல் 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் விவசாயம் செழிக்கும். விலைவாசி குறையும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.

