/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'உலகில் நிரந்தரமாக இருப்பது எழுத்து மட்டுமே'
/
'உலகில் நிரந்தரமாக இருப்பது எழுத்து மட்டுமே'
ADDED : ஆக 11, 2024 03:17 AM
ஈரோடு: ஈரோடு, சி.என்.கல்லுாரி வளாகத்தில் மனிதநேய மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்து வரும் ஈரோடு புத்தக திருவிழாவில், நேற்றைய மாலை நேர அரங்கில் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார். 'எது நிரந்தரம்?' என்ற தலைப்பில் திருச்சி எம்.பி., சிவா பேசியதாவது:
சில இடங்களில் நாம் நின்று பேசினால், நாம் உயர்ந்த, வளர்ந்த நிலைக்கு வந்துள்ளோம் என உணரலாம். அது, சென்னை கடற்கரை சீரணி அரங்கம், பாளையங்கோட்டை ஜவகர் திடல், மதுரை தமுக்கம் மைதானம், தஞ்சை திலகர் திடல், வேலுாரில் கோட்டைவெளி மைதானம் என பல உள்ளன. எல்லோருக்கும் அது ஒரு கனவாக இருந்தது. அதுபோல, ஈரோடு புத்தக திருவிழாவும் ஒன்று.
'எது நிரந்தரம்' என்பது கடினமானது. உறவு, காதல், விளைவுகள், ஆட்சி, அதிகாரம், பணம், செல்வம், சொத்து, அறிவு எதுவும் நிரந்தரம் இல்லை. கால வளர்ச்சியால் அது மாறி கொண்டே போகும். எதெல்லாம் மனிதர்களை ஒடுக்கி வைக்க பயன்படுத்தப்பட்டதோ, அவை நிரந்தரமில்லை என மாற்றப்பட்டது. காலச்சக்கரம் சுழலும்போது எந்த மாற்றமும் உலகில் தோன்றும். உலகம் அழியும். ஆனாலும், கல்வியும், எழுத்தும் நிரந்தரம். அதில் ஒன்று திருக்குறள். உலகம் அழியும்போது பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்றால், அது திருக்குறள் என்பார்கள். எனக்கு தெரிந்தவரை என்றும் நிரந்தரமாக இருப்பது எழுத்து மட்டும்தான். அது கல்வெட்டோ, ஓலைச்சுவடியோ, நுால்களோ என எதுவாக இருந்தாலும் நிரந்தரம். எழுத்தாளர்களின் படைப்புகளை வாங்கி சென்று, படிக்க சொல்லுங்கள். இவ்வாறு பேசினார்.
எம்.பி.,க்கள் பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
புத்தக திருவிழாவின் இன்றைய மாலை நேர அரங்கில், அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது வழங்கப்படுகிறது. விருது வழங்கி மத்திய அறிவியல் தொழில் நுட்ப துறை முன்னாள் செயலர் தி.ராமசாமி, பேராசிரியர் மு.லட்சுமணன் பேசுகின்றனர்.

