/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துாய்மையற்ற துாய்மை பணியாளர் குடியிருப்பு ஆணைய தலைவரிடம் கொட்டித்தீர்த்த பெண்கள்
/
துாய்மையற்ற துாய்மை பணியாளர் குடியிருப்பு ஆணைய தலைவரிடம் கொட்டித்தீர்த்த பெண்கள்
துாய்மையற்ற துாய்மை பணியாளர் குடியிருப்பு ஆணைய தலைவரிடம் கொட்டித்தீர்த்த பெண்கள்
துாய்மையற்ற துாய்மை பணியாளர் குடியிருப்பு ஆணைய தலைவரிடம் கொட்டித்தீர்த்த பெண்கள்
ADDED : ஜூலை 07, 2024 02:45 AM
ஈரோடு:துாய்மை பணியாளர்களின் குடியிருப்பை பார்வையிட்ட, தேசிய ஆணைய தலைவரிடம், துாய்மை தொழிலாளர்கள் குறைகளை அடுக்கி குமுறலை வெளிப்படுத்தினர்.
ஈரோட்டுக்கு நேற்று வந்த, தேசிய துாய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன், ஈரோடு மரப்பாலம் அருகே ஜீவானந்தம் சாலையில் உள்ள துாய்மை பணியாளர்களின் புதிய, பழைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்று குறை கேட்டு, ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எஸ்.பி., ஜவகர் உள்ளிட்டோர் சென்றனர்.
புதிய, பழைய குடியிருப்புகளில் முறையாக ஒயரிங் செய்யப்படாமல் உள்ளது. செப்டிக் டேங்க் மற்றும் குளியலறை கழிவு நீர் சேகரிக்கப்படும் தொட்டிகள் மிக மோசமாக, மூடிகள் உடைந்து காணப்பட்டது. குடியிருப்பை சுற்றிலும் கம்பங்கள் இருந்தும், மின் விளக்கு பொருத்தப்படவில்லை. அடுக்கு மாடி குடியிருப்பில் தரைத்தளத்தில்தான் ஊராட்சிகோட்டை குடிநீர் வருவதால், முதல் தளம் துவங்கி சில குடியிருப்பில் 4ம், சிலவற்றில், 6 தளங்களில் உள்ளவர்களும் தண்ணீரை பிடித்து துாக்கி செல்ல வேண்டி உள்ளது. மழை காலங்களிலும், சாக்கடை நீர் வெளியேறும்போதும் வீட்டுக்குள் செல்ல இயலாது. துர்நாற்றம் வீசுகிறது. வசிக்க இயலவில்லை, என்றனர். இதுபற்றி பெண்கள் முழு அளவில் புகார் தெரிவித்ததுடன், அழைத்து சென்று காட்டினர்.
இதை தொடர்ந்து ஆணைய தலைவர் வெங்கடேசன் பேசியதாவது:
கழிப்பறை, குளியலறை, நுழைவு பகுதி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றிலும் மின் விளக்கு அமைக்கப்படும். நல்லகவுண்டன்பாளையம் அல்லது, 25 கி.மீ.,க்குள் அரசின் குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளதால், இங்குள்ளவர்கள் அங்கு செல்ல விரும்பினால் உதவுகிறோம் என்றார்.
ஆனால், துாய்மை பணியாளர்கள், 'நல்லகவுண்டன்பாளையம் உட்பட, 25 கி.மீ., துாரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வழங்கினால், ஈரோட்டுக்கு வந்து செல்வது சிரமம். துாய்மை பணிக்கு அதிகாலை, 5:00 மணிக்கு அலுவலகத்தில் கையெழுத்திட்டு, பணி செய்து, மதியம் வீடு வந்து சாப்பிட்டு செல்ல இயலாது. மாலையில் பணி முடிந்தாலும் இரவு வெகுநேரமாகும். எனவே, இதே பகுதியில் வீடுகளை அமைத்து தர வேண்டும்,' என்றனர்.
வீட்டுமனை பட்டாவுடன் வீடு கட்டித்தருவதாக இருந்தால், துாரமான இடத்தை தேர்வு செய்ய வேண்டி வரும். இதன் மூலம் நிரந்தர தீர்வு காணலாம். யோசித்து கூறுங்கள், என வெங்கடேசன் யோசனை தெரிவித்து சென்றார்.