ADDED : ஜூலை 20, 2026 05:51 AM
ஈரோடு:ஆவினில்
கடந்த ஒன்றரை மாதமாக நெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உற்பத்தியை நிறுத்தியதால் ஸ்டால் களுக்கு சப்ளை
நிறுத்தப்பட்டுள்ளது.
ஆவினில் பால் கொள்முதல் அளவு, கடும்
வெயிலால் கறவை அளவு வெகுவாக குறைந்து சரிந்துள்ளது. கால்நடை
வளர்ப்போர் தனியாரிடம் பாலை வழங்கி வருவதும், கொள்முதல் குறைவுக்கு
பிரதான காரணமாக உள்ளது.
பால் கொள்முதல் குறைந்த நிலையில்
ஒன்றரை மாதங்களாகவே நெய் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது.
ஸ்டால்களில் ஏற்கனவே இருந்த நெய் பாட்டில்தான் விற்கப்பட்டது.
புதிதாக உற்பத்தி செய்து நெய் பாட்டில் விற்பனைக்கு கொண்டு
வரப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து
ஆவின் ஸ்டால் ஊழியர்கள் கூறியதாவது: பண்டிகை காலம் துவங்க உள்ளது.
மக்கள் ஆவின் மீதான நம்பிக்கை காரணமாக ஆவின் நெய்யை விரும்பி வாங்கி
செல்கின்றனர். ஆனால் பால் கொள்முதல் சரிவு எதிரொலியாக நெய்
உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. பால் கொள்முதல் உபரியானால் தான்
நெய் உற்பத்தி மீண்டும் துவங்கும்.
அது சாத்தியமா என தெரியவில்லை.
நெய் மட்டுமின்றி பாலில் இருந்து தயாரிக்கப்படும் உப பொருட்கள்
பலவற்றின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டு உள்ளது. மீண்டும் நெய்
உற்பத்தி, விற்பனை எப்போது துவங்கும் என பொதுமக்கள்
எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு கூறினர்.
