ADDED : செப் 02, 2026 06:36 AM

ஈரோடு:தேசிய இயற்கை வேளாண் இயக்க திட்டத்தில், சத்தியமங்கலம், தாளவாடி வட்டாரங்களில் இயற்கை வேளாண்மை தொகுப்பு விவசாயிகளுக்கு, 5 லட்சம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இதுபற்றி ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவகுமார் கூறியதாவது: ரசாயனமற்ற பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்க, தேசிய இயற்கை வேளாண் இயக்க திட்டம் செயல்படுகிறது. ஆர்வமுள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து, 125 ஏக்கரில் இயற்கை வேளாண் தொகுப்பு ஏற்படுத்தி ஊக்குவிக்கப்படும். சத்தி, தாளவாடி வட்டாரங்களில் தலா, 125 ஏக்கர் வீதம் இயற்கை வேளாண் தொகுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 250 விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தில் இயற்கை வேளாண்மை பயிற்சி, அறிமுக பயிற்சிவழங்கப்படும்.
இவர்களை ஊக்குவிக்க, இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு செலவுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ஏக்கருக்கு, 4,000 ரூபாய் வீதம், 250 ஏக்கருக்கு ஐந்து லட்சம் ரூபாய் அளிக்க நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.
விவசாயிகளின் செலவின பட்டியல்படி இரு தவணையாக, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஒவ்வொரு இயற்கை விவசாயியும், அருகே உள்ள, ஆறு விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை நடைமுறை குறித்த பயிற்சி அளித்து, ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
