ADDED : டிச 25, 2024 01:44 AM
ஈரோடு, டிச. 25--
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவன் கடந்த, 14ல் உடல் நலக்குறைவால் சென்னையில் இறந்தார். அவரது உடல் தகனம் செய்யப்பட்டு, நேற்று காலை அவரது அஸ்தி ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இளங்கோவன் மனைவி விசாலாட்சி, மகன் சஞ்சய் சம்பத் மற்றும் மாவட்ட காங்., நிர்வாகிகள் உட்பட குடும்பத்தார் அஸ்தியை பெற்று மரியாதை செய்தனர். பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள குடும்ப நினைவிடம் கொண்டு செல்லப்பட்டு, அவரது உருவப்படத்துடன் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அங்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, கிருஷ்ணகிரி எம்.பி., கோபிநாத், ஈரோடு மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
இந்த நினைவிடத்தில் குடும்பத்தை சேர்ந்த முன்னோர் நினைவிடம் உள்ளது. இங்கு இளங்கோவன் அஸ்தியும் வைத்து நினைவு பீடம் ஏற்படுத்த உள்ளனர்.

