ADDED : ஆக 14, 2026 05:53 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம்
வகுப்பு வரையிலான மாணவ, -மாணவியருக்கு குறுவள அளவிலான
கலைத்திருவிழா போட்டி வரும், 19ல் துவங்குகிறது.
தமிழகத்தில்
அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி, வட்டார அளவில், மாவட்டம்
மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டி ஆண்டுதோறும்
நடத்தப்படுகிறது. மாணவ--மாணவிகளின் கலைத்திறன்களை
வெளிக்கொணரும் வகையில் நடக்கும் இந்த போட்டிகளில், நடப்பு
கல்வியாண்டில் ஈரோடு மாவட்டத்தில் ஒன்று முதல் பிளஸ் 2
வரையிலானோருக்கு 'இளையோர் திறன்' என்ற மையக்கருத்தை அடிப்படையாக
கொண்டு ஐந்து பிரிவுகளில் அரசு பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவி
பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் கலைத்திருவிழா போட்டி நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பள்ளி அளவிலான போட்டி நிறைவு
பெற்றுள்ளது.
குறுவள அளவிலான போட்டி, 19 முதல் 21 வரை நடைபெற
உள்ளது. வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்று
முதலிடம் பெறும் மாணவ--மாணவிகள் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா
போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர். இதில் சிறப்பான திறமையை
வெளிப்படுத்துவோர் மாநில போட்டிகளில் பங்கேற்பார்கள்.
ஈரோடு
கருங்கல்பாளையம் காமராஜ் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1,
பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு வட்டார அளவில் கலை திருவிழா போட்டி
நடந்தது. இசை கருவிகள் தனி நபர், குழு, வில்லு பாட்டு, பரதம்,
நாட்டுபுற நடனம், நடிப்பு தனி நபர் மற்றும் குழு நடிப்பு, பல குரல்
பேச்சு, குழு நாடகம், செவ்வியல் இசை, பம்பை, உருமி, உடுக்கை அடித்தல்,
ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், பானை ஓவியம், களிமண் சிற்பம்,
ரங்கோலி, கேலி சித்திரம் வரைதல், மணல் சிற்பம், பொம்மலாட்டம்
உள்ளிட்ட பல போட்டி நடந்தது. இதில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன்
பங்கேற்றனர்.
