ஈரோடு: வேலுார், வசந்தநடை பகுதி, பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் நவீன்குமார், 36; ஈரோடு மாவட்ட ஆயுதப்படை பிரிவு ஏட்டு. சமீபத்தில் திருப்பூர் ஆயுதப்படை பிரிவில் இருந்து ஈரோட்டுக்கு மாற்றம் பெற்று வந்தார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி, ஒரு மகன் உள்ளனர். நவீன்குமாரின் பெற்றோர் வேலுாரிலும், மனைவி சேலம் மாவட்டம் ஆத்துாரிலும் வசிக்கின்றனர்.
நேற்று முன்தினம் நவீன்குமாரின் தந்தை நடராஜன், ஆயுதப்படை பிரிவு அலுவலகத்துக்கு போன் செய்து நவீன்குமார், மொபைல் போன் அழைப்பை ஏற்காதது குறித்து கேட்டுள்ளார். அதன் பின் ஆயுதப்படை போலீசார் நவீன் குமார் குடியிருப்புக்கு சென்றனர். கதவை திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்தனர். அப்போது அவர் துாக்கில் தொங்கி கொண்டிருந்தார். ஈரோடு தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நவீன்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.