/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.3.72 லட்சம் பறிமுதல்
/
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.3.72 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 11, 2024 11:42 PM

கள்ளக்குறிச்சி : தியாகதுருகம், திருக்கோவிலுார் பகுதிகளில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற 3.72 லட்சம் ரூபாயை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
தியாகதுருகம் பி.டி.ஓ., ஜெகநாதன் தலைமையிலான பறக்கும்படை குழுவினர், வடபூண்டி பகுதியில் நேற்று மதியம் 3:50 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வேப்பூர் நோக்கி சென்ற பைக்கில் (டி.என் 77 கே 7411) வந்த தம்பதியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், மாடூரை சேர்ந்த மாயவன் மகன் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி அம்சா ஆகியோர் 2 லட்சம் ரூபாயை எடுத்து சென்றது தெரிந்தது. கூத்தக்குடியில் உள்ள மாமியாரிடம் கொடுக்க பணம் எடுத்து செல்வதாக அம்சா தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால், 2 லட்சம் ரூபாயை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமியிடம் ஒப்படைத்தனர்.
திருக்கோவிலுார்
திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி, முகையூரில் தேர்தல் நிலை கண்காணிப்பாளர் ஜெய்சந்த் தலைமையிலான குழுவினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இருசக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 1 லட்சத்து 72 ஆயிரத்து 400 ரூபாயை பறிமுதல் செய்தனர். எல்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையின் மகன் மணி, 33; காய்கறி வியாபாரம் செய்யும் இவர், வசூல் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்ற போது, தேர்தல் நிலை கண்காணிப்பாளர் சோதனையில் சிக்கியது தெரியவந்தது. எனினும் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பறிமுதல் செய்த பணத்தை திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., கண்ணனிடம் ஒப்படைத்தனர்.

