/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆற்றில் மூழ்கிய மாணவர் உடல் மீட்பு
/
ஆற்றில் மூழ்கிய மாணவர் உடல் மீட்பு
ADDED : அக் 13, 2025 12:22 AM
திருக்கோவிலுார்; திருவரங்கம் தென்பெண்ணை ஆற்றில் மாயமான பள்ளி மாணவர் திருக்கோவிலுார் அருகே நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுாரை சேர்ந்தவர் செந்தில்முருகன் மகன் ஹேத்திராஜன், 15; கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவனுாரில் உள்ள தனது பாட்டி கலையரசி வீட்டில் தங்கி அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் சக மாணவர்களுடன் சேர்ந்து திருவரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர்.
கோவிலை ஒட்டி இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் செல்வதை பார்த்து ஆர்வ மிகுதியில் நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்தனர்.
அப்போது, ஹேத்திராஜன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். உடன் சென்ற மாணவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து கிராம பொதுமக்களும், சங்கராபுரம் தீயணைப்புத் துறையினர் தேடும் முயற்சியில் ஈடுபட்டார். இரவு 7:00 மணி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
நேற்று மதியம் ஒரு மணி அளவில் திருக்கோவிலுார் அடுத்த ஆவியூர் பகுதியில் மாணவர் சடலமாக கிடப்பது தெரியவந்தது. அப்பகுதி மக்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.