/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோடை காலங்களில் சீரான குடிநீர் விநியோகம்
/
கோடை காலங்களில் சீரான குடிநீர் விநியோகம்
ADDED : மார் 10, 2024 06:12 AM

கள்ளக்குறிச்சி, : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் கோடை காலங்களில் குடிநீர் விநியோகம் குறித்த ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:
மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு 4 கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம் மற்றும் 106 ஊரகப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகள், முடிவுற்ற திட்டப் பணிகள், நடைபெறவுள்ள திட்டப் பணிகள், குடிநீர் தேவைப்படும் இடங்கள் ஆகியவை குறித்து சம்மந்தப்பட்டத் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.
வரும் கோடை காலத்தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதை உறுதி செய்திடும் வகையிலும், குடிநீர் தேவைகள் குறித்து பொதுமக்களின் கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கட்டுப்பாட்டு அறை விரைவில் திறக்கப்பட உள்ளது. இவ்வலுவலக மொபைலில் மக்கள் குடிநீர் தேவைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
மக்கள் புகார்கள் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும். மக்கள் அளிக்கும் அனைத்து புகார்கள் மீது அலுவலர்கள் போர்கால அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் நகராட்சிகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு, சீரான அளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என கண்டறியப்படும் குடியிருப்பு பகுதிகளுக்கான குடிநீர் வழங்கும் திட்டம் முன்னேற்பாடுகள் குறித்து வரைவு திட்டத்தை அனைத்து அலுவலர்களும் சமர்ப்பிக்க வேண்டும்.
மாற்று குடிநீர் ஆதாரம் ஏதும் இல்லை என்ற நிலை ஏற்பட்டால் உடன் குடிநீர் வழங்க, தொடர்புடைய உள்ளாட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் தனபதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார், மாவட்ட ஊராட்சி செயலாளர் இளங்கோவன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் நடராஜன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் குமார் ராஜா மற்றும் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

