/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம் !.: விண்ணதிர முழங்கியது பக்தர்களின் கரகோஷம்
/
வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம் !.: விண்ணதிர முழங்கியது பக்தர்களின் கரகோஷம்
வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம் !.: விண்ணதிர முழங்கியது பக்தர்களின் கரகோஷம்
வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம் !.: விண்ணதிர முழங்கியது பக்தர்களின் கரகோஷம்
ADDED : மே 27, 2024 07:07 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தில் நேற்று, தேரோட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கில் கூடிய பக்தர்கள், அதிர்வேட்டுகள் முழங்க, 'வரதா, கோவிந்தா, அத்திவரதா, பரந்தாமா' என கரகோஷங்களுடன், தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து தங்க சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
கடந்த 22ம் தேதி காலை கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏழாம் நாள் பிரபல உற்சவமான தேரோட்டம், நேற்று காலை கோலாகலமாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி, நேற்று அதிகாலை 2:15 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டார். 2:50 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தேரில் எழுந்தருளிய பெருமாளுக்கு, பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.
தேரில் எழுந்தருளிய சுவாமியை தரிசிக்க அதிகாலை 3:00 மணியில் இருந்தே தேரடியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர்.
காலை 6:10 மணிக்கு, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, 'வரதா, கோவிந்தா, அத்திவரதா, பரந்தாமா' என, கரகோஷங்களுடன் வடம் பிடித்து இழுக்க, திரளான பக்தர்களின் வெள்ளத்திற்கு இடையே, தேர் அசைந்து ஆடியபடியே புறப்பட்டது.
காந்தி சாலை, மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம், கங்கைகொண்டான் மண்டபம், பூக்கடை சத்திரம் உள்ளிட்ட சந்திப்பு பகுதியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து, வரதராஜரை வழிபட்டனர்.
தேரடியில் இருந்து 6:10 மணிக்கு புறப்பட்ட தேர், காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பன், நான்கு ராஜ வீதி வழியாக பவனி வந்தது.
வரதராஜ பெருமாளுக்கு பக்தர்கள், நாட்டு சர்க்கரை, முந்திரி, திராட்சை, பாதாம் உள்ளிட்டவற்றை கொண்டு நைவேத்யம் செய்து, தேங்காய் உடைத்து தீபாராதனை காண்பித்தனர்.
தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு, பல்வேறு இடங்களில் நீர்மோர், புளியோதரை, பொங்கல், தயிர் சாதம், சாம்பார், பிரின்ஜி ஆகிய உணவு வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு தேரில் இருந்து வரதராஜ பெருமாள் இறங்கி கோவிலை சென்றடைந்தார்.
விடுமுறை தினம் மற்றும் முகூர்த்த தினமாக இருந்ததால், தேரோடும் வீதி முழுதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
பக்தர்களின் பாதுகாப்புக்காக காஞ்சிபுரம் எஸ்.பி.,சண்முகம் தலைமையில், 750 போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்களின் பாதுகாப்புக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனம், தேரை பின்தொடர்ந்து சென்றது.
நாளை காலை 10:00 மணிக்கு அனந்தசரஸ் திருக்குளத்தில், தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. அதை தொடர்ந்து பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

