/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 42 துணை சுகாதார நிலையங்கள் நிலை படுமோசம்!
/
காஞ்சியில் 42 துணை சுகாதார நிலையங்கள் நிலை படுமோசம்!
காஞ்சியில் 42 துணை சுகாதார நிலையங்கள் நிலை படுமோசம்!
காஞ்சியில் 42 துணை சுகாதார நிலையங்கள் நிலை படுமோசம்!
ADDED : மார் 04, 2024 06:22 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 துணை சுகாதார நிலையங்களின் கட்டடம் சேதமடைந்து மோசமான நிலையில் இருப்பதால், கிராமங்களில் மருத்துவ சேவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில், ஐந்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், 18 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், ஐந்து நகர ஆரம்ப சுகாதார நிலையம், 143 கிராமப்புற துணை சுகாதார நிலையம், 26 நகர துணை சுகாதார நிலையங்கள் உள்ளன.
தவிர, ஐந்து நடமாடும் மருத்துவ வாகனம், 10 பள்ளி சிறார் நல வாகனம் என, பல்வேறு மருத்துவ கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
ஊழியர்கள் பற்றாக்குறை
பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் மருத்துவம் தொடர்பாக ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.
அந்த வரிசையில், துணை சுகாதார நிலையங்களுக்கு, கட்டட வசதிகள் அறவே இல்லை. ஏற்கனவே இருந்த கட்டடங்களும், கிராமப்புற சுகாதார செவிலியர்கள் பயன்படுத்த முடியாதபடி சேதமடைந்து, தண்ணீர் கசிவு ஏற்படுகிறது.
சேதமடைந்த கட்டடங்களுக்கு பதிலாக, புதிய கட்டடங்களை கட்டிக் கொடுத்தாலும், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இன்றி, செவிலியர் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கீழ்கதிர்பூர், ஈஞ்சம்பாக்கம், தண்டலம், படப்பை, அகரம் துளி உட்பட 42 துணை சுகாதார நிலையங்கள் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
இதனால், போலியோ சொட்டு மருந்து, யானைக்கால் தடுப்பு மாத்திரை, வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் கர்ப்பிணியரின் சுகாதார மேம்பாடு பணிகள் தொய்வடைந்து உள்ளன.
குறிப்பாக, சுகாதார செவிலியர் மற்றும் மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டங்களுக்கு செல்லும்போது, ஏதேனும் அரசு அங்கன்வாடி மைய கட்டடம், பள்ளி கட்டடங்கள், ஊராட்சிக்கு சொந்தமான கட்டடங்களை பயன்படுத்த வேண்டி உள்ளது.
எதிர்பார்ப்பு
இதுபோல, கட்டடங்களில் தண்ணீர் மற்றும் இயற்கை உபாதை கழிக்க போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், சுகாதார செவிலியர்கள், வீடு தேடி மருத்துவ பெண் ஊழியர்கள் மற்றும் நடமாடும் மருத்துவக் குழுவினர் புலம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது போன்ற உபாதைகளை தவிர்க்க, துணை சுகாதார நிலையங்களை புதுப்பித்து, கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு அளிக்க வேண்டும்.
கிராமப்புற சுகாதார செவிலியரை பார்க்க வரும் கர்ப்பிணியர் சிரமத்தை தவிர்க்கவும், இது பயனுள்ளதாக இருக்கும்என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கிராமப்புற செவிலியர்களுக்கு, பயணப்பட்டியலின்படி தினசரி வெவ்வேறு இடங்களுக்கு செல்லவிருப்பதால், அவர்களுக்கு தனி கட்டடம் வசதி தேவை இல்லை.
கர்ப்பிணி அறை, பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடுவதற்கு, அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதற்கு அறிவுரை வழங்கி விடுகின்றனர். நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் போது மட்டுமே கட்டடம் வசதி தேவைப்படுகிறது.
அதை பூர்த்தி செய்யும் வகையில், புதிய கட்டடம் கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். ஏதேனும் ஒரு நிதியில் கட்டடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

