ADDED : செப் 29, 2025 12:58 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, பஞ்சர் ஆன சரக்கு வேனின் டயரை மாற்றும் போது, அரசு பேருந்து மோதியதில் டிரைவர் உயிரிழந்தார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் தேவராஜ், 51; லாரி டிரைவர். நேற்று முன்தினம் மாலை, 'அசோக் லேலேண்டு' சரக்கு வேனில், சென்னை கொடுங்கையூரில் இருந்து, மர பலகைகளை ஏற்றி கொண்டு சுங்குவார்சத்திரம் சென்றார்.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இருங்காட்டுக்கோட்டை அடுத்த, பென்னுார் துணை மின் நிலையம் அருகே சென்ற போது, சரக்கு வேனின் டயர் பஞ்சர் ஆனது.
இதையடுத்து, சரக்கு வேன் ஓட்டுநர் தேவராஜ், வாகனத்தில் இருந்து இறங்கி, வாகனத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முற்படும் போது, அதே திசையில் சென்னையில் இருந்து வேலுார் சென்ற அரசு பேருந்து, தேவராஜ் மீது மோதியது. இதில், தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேதே பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.