ADDED : செப் 02, 2025 01:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் அருகே, தனியார் கல்லுாரி எதிரே, போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
சுங்குவார்சத்திரம் அடுத்த, குண்ணம் பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லுாரி அருகே, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து, போதை மாத்திரை விற்பனை செய்வதாக, சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, நேற்று காலை, போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கல்லுாரி எதிரே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அவரிடம் நடத்திய சோதனையில், போதை மாத்திரை இருப்பது தெரிந்தது. இதையடுத்து, புதுபெருங்களத்துார் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், 29, என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிந்து 20 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.