/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்று தடுப்பணையில் மணல் மேடால் விரைவில் வறண்டு போகும் அவலம்
/
பாலாற்று தடுப்பணையில் மணல் மேடால் விரைவில் வறண்டு போகும் அவலம்
பாலாற்று தடுப்பணையில் மணல் மேடால் விரைவில் வறண்டு போகும் அவலம்
பாலாற்று தடுப்பணையில் மணல் மேடால் விரைவில் வறண்டு போகும் அவலம்
ADDED : செப் 27, 2024 11:36 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் அருகே பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. பாலாற்றின் மூலம் திருமுக்கூடல், மதூர், பட்டா சிறுதாமூர், பினாயூர் பழையசீவரம், உள்ளாவூர் போன்ற சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தியாவதோடு விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
இதனால், இப்பகுதி பாலாற்று படுகையை மையமாக கொண்டு தடுப்பணை கட்டி நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க செய்ய சுற்றுவட்டார கிராம விவசாயிகள் வலியுறுத்தினர்.
அதன்படி, 2020ல், பழையசீவரம்- பழவேரி பாலாற்றின் குறுக்கே, நபார்டு திட்டத்தின் கீழ், 42 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த தடுப்பணையின் வலது மற்றும் இடது புறங்களில் மதகுடன்கூடிய ஷட்டர் மற்றும் துணை பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக இந்த தடுப்பணையில் தண்ணீர் நிரம்பினால் பினாயூர், அரும்புலியூர், உள்ளாவூர், பாலூர் உள்ளிட்ட ஏரிகளுக்கு பாசன கால்வாய் வழியாக தண்ணீர் செல்ல வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தடுப்பணை கட்டியதை தொடர்ந்து, 4 ஆண்டுகளாக பருவ மழை காலத்தின் போது தடுப்பணை நிரம்பி வழிகிறது. அச்சமயங்களில், பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தண்ணீரோடு மணல் அடித்து வந்து தடுப்பணையின் பள்ளமான ஆழ பகுதிகள் மூடப்பட்டு, தற்போது அணை உயரத்திற்கு மணல் சேர்ந்து மேடு போல் உள்ளது.
இதனால், 6 அடி உயரத்திற்கு கட்டப்பட்ட பாலாற்று தடுப்பணை, தற்போது ஒரு அடி உயர ஆழம் கூட இல்லாமல் மணல் மூடி உள்ளதால் சிறு மழைக்கே அணை நிரம்பி, அடுத்த சில தினங்களில் தண்ணீர் வற்றி போகின்றன.
இதனால், இப்பகுதியில் தடுப்பணை இருந்தும், பாலாற்றின் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பின்றி, விவசாயத்திற்கு பயன் அளிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே, பருவமழை காலத்திற்குள், இத்தடுப்பணையில், அணை உயரத்துக்கு குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும் என, பாலாற்று பாசன விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.