/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகர பேருந்து இயக்கம் தொடர்பாக 'சர்வே' அடுக்கடுக்கான புகார்களால் அலறிய அதிகாரிகள் 'கேட்டிருக்கவே வேண்டாம் சாமி'
/
மாநகர பேருந்து இயக்கம் தொடர்பாக 'சர்வே' அடுக்கடுக்கான புகார்களால் அலறிய அதிகாரிகள் 'கேட்டிருக்கவே வேண்டாம் சாமி'
மாநகர பேருந்து இயக்கம் தொடர்பாக 'சர்வே' அடுக்கடுக்கான புகார்களால் அலறிய அதிகாரிகள் 'கேட்டிருக்கவே வேண்டாம் சாமி'
மாநகர பேருந்து இயக்கம் தொடர்பாக 'சர்வே' அடுக்கடுக்கான புகார்களால் அலறிய அதிகாரிகள் 'கேட்டிருக்கவே வேண்டாம் சாமி'
ADDED : நவ 17, 2024 12:48 AM
சென்னை,
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும், 3,000க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில், தினமும் 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
இலவச பயண திட்டம்
சென்னையின் எல்லை பகுதி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு, மகாபலிபுரம், திருவள்ளூர் என, புறநகர் பகுதிகளுக்கும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் போதிய மாநகர பேருந்துகள் இயக்குவதில்லை. சில வழிதடங்களில் பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக, பயணியர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மாநகர பேருந்துகளின் இயக்கம் மற்றும் சேவையை மேம்படுத்துவது, பேருந்துகளில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றனர், பயணியரின் கோரிக்கைகள் என்ன உள்ளிட்ட 10 கேள்விகளை தயாரித்து, தனியார் நிறுவனம் வாயிலாக, கடந்த ஒரு வாரமாக பயணியரிடம் 'சர்வே' நடத்தப்பட்டு வருகிறது.
10க்கும் மேற்பட்ட குழுவினர் சர்வே நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு குழுவினரும் 2,000க்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துகள் கேட்டு வருகின்றனர். பெண்கள் இலவச பயண திட்டம், புதிய தாழ்தள பேருந்துகள் குறித்து, பயணியர் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.
ஆனால், பேருந்துகள் இயக்குவதில் தாமதம், இருக்கை வசதியாக இல்லை, பேருந்து நிலையங்களில் 45 நிமிடங்கள் வரை காத்திருப்பது, மழை பெய்யும் போது சில பேருந்துகளில் கூரை ஒழுகுவது, ஜன்னல்கள் உடைந்திருப்பது, புது வழித்தடங்களில் கூடுதல் பேருந்து வசதி இல்லை என, பயணியர் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, புறநகர்களில் தான் அதிகமாக புகார்களை தெரிவித்துள்ளனர். இது, போக்குவரத்து அதிகாரிகளை விழிபிதுங்க வைத்துள்ளது.
தீர்வுகள் எப்போது?
இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் அதிகரித்து வருவதால், பேருந்துகளின் தேவை அதிகமாக இருக்கிறது.
வரும் 2030ல் மாநகர பேருந்துகளின் தேவை 7,000 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போது 3,000 மாநகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
மாநகர பேருந்து இயக்கம், சேவையை மேம்படுத்தவது குறித்து பயணியரிடம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
விரைவில் பயணியரின் புகார்கள், கோரிக்கைகள் அறிக்கையாக தயாரிக்கப்படும். பின்னர், அவர்களின் கருத்துக்களை ஆய்வு செய்து, பிரச்னைகளை படிப்படியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையிலும், மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ், 1,000 தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க உள்ளோம்.
ஒரு கி.மீ., துாரத்திற்கு இயக்கினால், ஒரு தொகையை இவ்வளவு என நிர்ணயம் செய்து வழங்குவோம்.
இதனால், மாநகர போக்குவரத்து கழகத்தின் செலவை 25 சதவீதம் வரையில் குறைக்க முடியும். முதல்கட்டமாக, 500 தனியார் பேருந்துகளை, அடுத்த சில மாதங்களில் கொண்டுவர உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.