/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.4.5 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : மற்ற மாநிலங்களில் குற்றவாளிகளை தேடும் போலீஸ்
/
ரூ.4.5 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : மற்ற மாநிலங்களில் குற்றவாளிகளை தேடும் போலீஸ்
ரூ.4.5 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : மற்ற மாநிலங்களில் குற்றவாளிகளை தேடும் போலீஸ்
ரூ.4.5 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : மற்ற மாநிலங்களில் குற்றவாளிகளை தேடும் போலீஸ்
ADDED : நவ 17, 2025 08:10 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே, காரில் வைத்திருந்த 4.5 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தப்பியோடிய 12 பேரை, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேடுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மும்பை அருகே உள்ள மேற்கு போரிவலி பகுதியைச் சேர்ந்தவர் ஜாடின், 56; கடந்த 2017ம் ஆண்டு முதல், சகோதரருடன் சேர்ந்து, கூரியர் சேவை நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
இந்த கூரியர் நிறுவனம் வாயிலாக, பணம், நகை ஆகிய பொருட்களை கமிஷன் அடிப்படையில், இந்தியா முழுதும் அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம், 20ம் தேதி, 'ஹூண்டாய் கிரட்டா' காரில், 4.5 கோடி ரூபாயை லாக்கர் ஒன்றில் வைத்து, பியூஸ்குமார் மற்றும் தேவேந்திர படேல் ஆகிய இரு ஓட்டுநர்களை பெங்களூரில் இருந்து சென்னை சவுக்கார்பேட்டை பகுதிக்கு அனுப்பி உள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த, ஆட்டுப்புத்துார் அருகே கார் சென்றபோது, மூன்று கார்கள் திடீரென வந்து, ஹூண்டாய் காரை மடக்கி நிறுத்தியது.
காரில் இருந்து இறங்கிய 10க்கும் மேற்பட்டவர்கள், ஆயுதங்களுடன் வந்து, காரில் இருந்த, பியூஸ்குமார் மற்றும் தேவேந்திர படேல் ஆகிய இருவரையும் கடத்தி, காரில் இருந்த, 4.5 கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து, பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூன்று மாதங்கள் புலன் விசாரணை நடத்தினர். சாலை, கடைகள் என, 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், கேரளாவில் பல நாட்கள் தங்கியும் விசாரணை நடத்தினர்.
வழக்கில் சம்பந்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ், 42; ஜெயன், 46; சுஜிலால், 36; ரிஷாத், 27; குஞ்சு முகமது, 31 ஆகிய ஐந்து பேரையும், கடந்த மாதம் 25ம் தேதி, போலீசார் கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் இருந்து, 123 சவரன் தங்க நகைகளும், 13 லட்சம் ரூபாயையும், கேரளாவில் இருந்து போலீசார் மீட்டனர்.
தலைமறைவாக உள்ள 12 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் மேலாகியும், தலைமறைவாக உள்ள 12 பேர் இதுவரை பிடிபடவில்லை. தப்பியோடிய குற்றவாளிகளை பிற மாநிலங்களில் தேடுவதாக போலீசார் தெரிவித்துஉள்ளனர்.
இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தப்பியோடிய குற்றவாளிகளை தொடர்ந்து தேடி வருகிறோம். கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும், கர்நாடகா எல்லையில் வைத்து பிடித்தோம்.
'பிற மாநிலங்களில் மற்ற குற்றவாளிகள் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளது. பிற மாநிலங்களில் உள்ளனரா என, ஆய்வு செய்கிறோம். அவர்களையும் விடாமல் பிடிப்போம்' என்றார்.

