/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரந்துாரை சுற்றி வீட்டு மனைகள் வாங்க... தயக்கம்:கட்டடத்திற்கு உயர கட்டுப்பாட்டால் அச்சம்
/
பரந்துாரை சுற்றி வீட்டு மனைகள் வாங்க... தயக்கம்:கட்டடத்திற்கு உயர கட்டுப்பாட்டால் அச்சம்
பரந்துாரை சுற்றி வீட்டு மனைகள் வாங்க... தயக்கம்:கட்டடத்திற்கு உயர கட்டுப்பாட்டால் அச்சம்
பரந்துாரை சுற்றி வீட்டு மனைகள் வாங்க... தயக்கம்:கட்டடத்திற்கு உயர கட்டுப்பாட்டால் அச்சம்
ADDED : நவ 14, 2025 12:20 AM

காஞ்சிபுரம்: பரந்துார் விமான நிலையம் அருகே, ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடந்து வரும் நிலையில், கட்டடங்களுக்கான உயர கட்டுப்பாடுகள் அமலாகும் என்பதால், விமான நிலையம் அருகிலேயே வீட்டு மனைகளை வாங்க பலர் தயக்கம் காட்டுகின்றனர். சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்துாரை சுற்றி, 5,700 ஏக்கரில் அமைய உள்ளது. இதில், 3,700 ஏக்கர் தனியார் நிலங்கள் என்பதால், அவற்றை கையகப்படுத்தி, உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகள் வேகமாக நடக்கின்றன.
இழப்பீடு இதுவரை, 1,000 ஏக்கருக்கு மேலாக நில எடுப்பு பணிகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள தனியார் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் விமான நிலைய பணிகள் முழுமையாக முடியும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், விமான நிலையம் அமையவுள்ள இடத்தின், சுற்றியுள்ள பகுதிகளில், ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறக்கிறது.
சுற்றியுள்ள தக்கோலம், சுங்குவார்சத்திரம், காரை, ஏனாத்துார், ராஜகுளம், சின்னையஞ்சத்திரம், சந்தவேலுார் என, பல்வேறு கிராமங்களில், புஞ்சை நிலங்களுக்கான தடையின்மை சான்று பெற்று, வீட்டு மனை பிரிவுகள் பல உருவாகி வருகின்றன.
கட்டடங்கள் இடிப்பு பரந்துார் விமான நிலையம் அருகிலேயே வீட்டு மனைகள் இருப்பதாக, சமூக வலைதளங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் விளம்பரம் செய்கின்றனர்.
விமான நிலையம் அருகிலேயே வீட்டு மனைகளை வாங்கினால், எதிர்காலத்தில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகமாகும் என, பலரும் எதிர்பார்த்து வீட்டு மனைகளை வாங்கி வருகின்றனர்.
அதேசமயம், உயர கட்டுப்பாடு விதிக்கப்படும் என்பதால், விமான நிலையத்தின் எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில் வீட்டு மனைகளை வாங்க ஒரு தரப்பினர் தயங்குகின்றனர்.
உயரமான கட்டடங்கள், விமானத்தின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாகும் என்பதால், விமான போக்குவரத்து ஆணையம் பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது.
விமான நிலையத்தின் எல்லையிலிருந்து, 1 கி.மீ., தொலைவில் 20 மீட்டர் உயரமும், 5 கி.மீ., துாரமும் தொலைவு வரை, 45 மீட்டர் உயரத்திற்கு மேலாக கட்டடங்கள் கட்ட முடியாது.
சென்னை விமான நிலையத்தின் அருகே உள்ள கட்டடங்கள், மொபைல் போன் டவர்கள், தென்னை மரங்கள் என, 800 எண்ணிக்கையிலான தடைகள் பற்றி, சென்னை விமான நிலையம் கொடுத்த தகவலின்படி, சில மாதங்கள் முன் கட்டடங்கள் பல இடிக்கப்பட்டன.
ஆர்வம் காட்டுவதில்லை விமான நிலையம் அருகில் உள்ள கட்டடங்களுக்கு உயர கட்டுப்பாடு விதிக்கப்படும். அதனால், எதிர்காலத்தில் உயரமான வீடுகள் கட்ட முடியாது; வணிக கட்டடங்களையும் உருவாக்க முடியாது என்பதால் பலரும் வீட்டு மனை வாங்க தயங்குகின்றனர்.
விமான நிலைய எல்லை சுற்றிய பகுதிகளில், சதுரடி 1,000 ரூபாய் முதல் 3,000 வரை, வீட்டு மனைகள் விற்கப்படுகின்றன.
விமான நிலையத்தின் விதிமுறைகள் இருப்பது பற்றி தெரிந்த நபர்கள், வீட்டு மனை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை என, தெரிய வந்துள்ளது.
வீட்டு மனை விற்பனை அமோகம் -------------------------------------------பரந்துார் விமான நிலையம் அருகே வீடு கட்ட, உயர கட்டுப்பாடுகள் இருப்பதால், வீட்டு மனை பிரிவுகள் அமைப்பதிலும், வீட்டு மனைகளை வாங்கவும் சிலர் தயக்கம் காட்டுகின்றனர். விதிமுறைகள் பற்றி பலருக்கும் தெரிந்துள்ளது. விமான நிலையத்திலிருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள வீட்டு மனைகள் அமோகமாக விற்பனையாகின்றன. - எம்.ஏழுமலை, ரியல் எஸ்டேட் முகவர், காஞ்சிபுரம்.

