/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்கன்வாடி செல்லும் பாதை மண் கொட்டி சீரமைப்பு
/
அங்கன்வாடி செல்லும் பாதை மண் கொட்டி சீரமைப்பு
ADDED : நவ 28, 2025 04:42 AM

உத்திரமேரூர்: நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, மிளகர்மேனியில் அங்கன்வாடி மையம் செல்லும் பாதையில், மண் கொட்டி சீரமைக்கப்பட்டு வருகிறது.
உத்திரமேரூர் ஒன்றியம், திருவாணைக்கோவில் ஊராட்சியில், மிளகர்மேனி துணை கிராமம் உள்ளது. இங்குள்ள, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், மேல்நிலை நீர்த்தொட்டியின் பிரதான குழாயிலிருந்து, வெளியேறும் உபரிநீரானது அங்கன்வாடி மையம் செல்லும் பாதையில் தேங்கி வந்தது.
இதனால், அங்கன்வாடி மையம் செல்லும் குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே, அங்கன்வாடி மையம் செல்லும் பாதையில் மண் கொட்டி சீரமைக்க, ஊராட்சி நிர்வாகத்திற்கு பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தினர் அங்கன்வாடி மையம் செல்லும் பாதையை மண் கொட்டி சீரமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
இது குறித்து திரு வாணைக்கோவில் ஊராட்சி செயலர் ராஜலட்சுமி கூறியதாவது:
மிளகர்மேனியில் அங்கன் வாடி மையம் செல்லும் பாதை, தற்காலிகமாக மண் கொட்டி சீரமைக்கப்பட்டு வருகிறது.
ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று, கான்கிரீட் சாலை அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

