/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகவதி ஆற்றில் இருந்து மணல் கடத்தல்... அதிகரிப்பு:பக்கத்து மாவட்டங்களுக்கும் செல்வதால் அதிர்ச்சி
/
வேகவதி ஆற்றில் இருந்து மணல் கடத்தல்... அதிகரிப்பு:பக்கத்து மாவட்டங்களுக்கும் செல்வதால் அதிர்ச்சி
வேகவதி ஆற்றில் இருந்து மணல் கடத்தல்... அதிகரிப்பு:பக்கத்து மாவட்டங்களுக்கும் செல்வதால் அதிர்ச்சி
வேகவதி ஆற்றில் இருந்து மணல் கடத்தல்... அதிகரிப்பு:பக்கத்து மாவட்டங்களுக்கும் செல்வதால் அதிர்ச்சி
ADDED : ஆக 15, 2025 11:35 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வேகவதி ஆற்றுப்படுகையில் இருந்து, மூட்டை மூட்டையாக ஆற்று மணல் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கட்டுமான பணிக்காக, அருகில் உள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆற்று மணல் அமோகமாக கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பாலாற்றின் கிளை ஆறான வேகவதி ஆறு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் அருகே துவங்கி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பாய்ந்து, தாமல், முசரவாக்கம், கீழ்கதிர்பூர், காஞ்சிபுரம் நகரம், நத்தப்பேட்டை வழியாக, தாங்கி கிராமத்தில் உள்ள பாலாற்றில் மீண்டும் கலக்கிறது.
வேகவதி ஆற்றின் 26 கி.மீ.,யில், பெரும்பகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆற்றில் ஆக்கிரமித்து வீடு கட்டுதல், செங்கல் சூளை நடத்தி, நாசம் செய்வது மட்டுமல்லாமல், ஆற்று மணலை மூட்டை மூட்டையாக கடத்தில், ஆற்றின் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2013ம் ஆண்டு முதல் மணல் எடுக்க தடை நீடிக்கிறது. இந்த விவகாரத்தில், முன்னாள் கலெக்டர் சித்திரசேனன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
மணல் கடத்தல் விவகாரத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில், போலீசார் தீவிரமாக கண்காணிப்பது வழக்கம். ஆனால், சமீபகாலமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
வேகவதி ஆறு பாயக்கூடிய தாமல், முசரவாக்கம், கிளார் ஆகிய பகுதியில் இருந்து, இருசக்கர வாகனங்களில் மூட்டை மூட்டையாக மணல் கடத்தல் நடக்கிறது. இந்த கிராமங்களில் உள்ள ஆற்று படுகைகள் பெரிய பெரிய பள்ளங்களாக காட்சியளிக்கின்றன.
பாலாறு, செய்யாறு ஆகிய ஆறுகளிலும் மணல் கடத்தல் அதிகரித்த நிலையில், போலீசாரின் கிடுக்கிப்பிடி காரணமாக, மணல் கடத்தல் ஓரளவு குறைந்துள்ளது. ஆனால், வேகவதி ஆற்றின் படுகைகளில் மணல் கடத்தல், இரவு நேரத்தில் அதிகளவில் நடப்பதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கட்டுமான பணிக்கு, பலரும் எம்.சாண்ட் பயன்படுத்தி வருகின்றனர். சிலர், ஆற்று மணலில் கட்ட விரும்புவதால், மணல் கடத்துவோரிடம், அதிக விலைக்கு வாங்கி கட்டடம் கட்டுகின்றனர்.
ஒரு யூனிட் எம்.சாண்ட் 5,000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், ஆற்றிலிருந்து கடத்தப்படும் ஒரு யூனிட் மணல், 10,000 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுகிறது.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து கடத்தப்படும் மணல், அருகில் உள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கட்டுமான பணிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கிராமப்புறங்களில் இருந்து இருசக்கர வாகனங்களில் மூட்டை மூட்டையாக, இந்த இரு மாவட்டங்களுக்கு எடுத்து செல்வதை போலீசார் கண்காணிப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.
ஆற்றில் இருந்து இரவு நேரத்தில் மட்டுமே பெரும்பாலும் மணல் கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. மணல் கடத்தலில் ஈடுபடுவோரை, அவ்வப்போது போலீசார் கைது செய்தாலும், கிராமப்புறங்களில் வேகவதி ஆற்றுப்படுகையில் மணல் கடத்தல் குறைந்தபாடில்லை.
மணல் கடத்தும் நபர்கள், காஞ்சிபுரம் நகர்ப்புறங்களில் அதிகளவில் மணலை விற்பனை செய்வதில்லை. நகர்ப்புறத்தில் போலீசார் கண்காணிப்பு அதிகம் என்பதாலும், 'சிசிடிவி' கேமரா உள்ளதாலும், காஞ்சிபுரம் நகர்ப்புறங்களுக்கு மணல் கொண்டு செல்வது குறைவாக உள்ளது.
கிராமப்புறங்களில் வீடு கட்டுவோருக்கு, எளிதாக ஆற்று மணல் விற்பனை செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேகவதி ஆறு பாயக்கூடிய கிராமப்புறங்களில், போலீசாரின் இரவு நேர ரோந்து பணிகளை போலீசார் அதிகரிக்க வேண்டும்.
மேலும், மணல் கடத்தலில் ஈடுபடுவோரை கண்காணிக்க தீவிரம் காட்டினால் மட்டுமே, வேகவதி ஆற்றில் மணல் கடத்தல் சம்பவங்கள் குறையும் என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு நேர ரோந்து பணிகளை அதிகரித்துள்ளோம். மணல் கடத்தல் சம்பந்தமாக புகார் வருவதால், ஆற்று படுகையில் நாங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். கீழம்பியிலும் சோதனை நடத்துகிறோம். மணல் கடத்தலை முற்றிலும் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறை அதிகாரி, காஞ்சிபுரம்.