'ஜல் ஜீவன்' திட்ட பணிக்கு வழிகாட்டி இல்லாததால் சொதப்பல்!: ரூ.226 கோடி செலவழித்தும் மக்களுக்கு பயனில்லை
'ஜல் ஜீவன்' திட்ட பணிக்கு வழிகாட்டி இல்லாததால் சொதப்பல்!: ரூ.226 கோடி செலவழித்தும் மக்களுக்கு பயனில்லை
UPDATED : ஜூலை 24, 2026 10:12 PM
ADDED : ஜூலை 24, 2026 09:22 PM

காஞ்சிபுரம்:'ஜல் ஜீவன்' எனும் குடிநீர் திட்டத்தை கண்காணிப்பதற்கான குழு அமைப்பதில் அதிகாரிகள் இடையே தடுமாற்றம் உள்ளதால், 226 கோடி செலவழித்தும் முறையான கண்காணிப்பின்றி ஆழ்துளை கிணறுகள் வறண்டுள்ளன. மேல்நிலை தொட்டிகளுக்கு மின் இணைப்பு இல்லாததால், குடிநீர் ஏற்ற முடியாத நிலை உள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஒன்றியங்களில் உள்ள 274 ஊராட்சிகளில், 1,354 குக்கிராமங்கள், 2.15 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு, பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்யும் வகையில், 2020ம் ஆண்டு 'ஜல் ஜீவன்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.
மத்திய அரசு 45 சதவீதம், மாநில அரசின் பங்களிப்பாக 45 சதவீதம், பொதுமக்களின் பங்களிப்பாக 10 சதவீதம் அடிப்படையில், இத்திட்டம் நடைமுறைபடுத்தி உள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஜல் ஜீவன் திட்டத்திற்கு, 187 கோடி ரூபாய்; 15வது நிதிக்குழு மானியம் 22.57 கோடி ரூபாய், ஜல் ஜீவன் சேமிப்பு நிதி, 17 கோடி என, மொத்தம் 226 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதில் 1,695 பணிகளை பூர்த்தி செய்து, 1.16 லட்சம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடித்து குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. தவிர, இந்த திட்டத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் துார்ந்துள்ளதாக, ஊராட்சி மக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் படுநெல்லி, கொட்டவாக்கம், தென்னேரி, கரூர் ஆரியபெரும்பாக்கம், அகரம் துளி, வில்லிவலம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் ஆழ்துளை கிணறுகள் துார்ந்துள்ளன.
இதுகுறித்து, ஊரக உள்ளாட்சி நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் சீரமைக்க வேண்டும் என, அதிகாரிகள் கூறியதால், சில ஊராட்சி தலைவர்கள் சீரமைக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த குடிநீர் பணிகளை முறையாக கண்காணிக்க, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி பணிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி தலைவர்கள் இருந்தாலும், அவர்கள் முறையாக பணியை மேற்கொள்ளாததால், ஜல் ஜீவன் திட்டத்தில் போட்ட குடிநீர் பணிகள் முடங்கியுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தில் பணிகளை நடைமுறைக்கு முழுதாக கொண்டுவர, தனியாக குழு அமைக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு குழுவில், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்தான், குடிநீர் திட்டப்பணிகளை கண்காணிக்க வேண்டும். ஆனால், இளநிலை உதவியாளரை நியமிப்பதாக கூறப்படுகிறது.
இந்த கண்காணிப்பு குழு நியமிக்க ஊரக வளர்ச்சி துறையினர் தடுமாறி வருகின்றனர். குழுவில், தகுதி வாய்ந்த நபர்களை நியமிக்க வேண்டும் என, ஊராட்சி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி கூறியதாவது:
ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் முறைப்படுத்தும் பணிகளுக்கு, மாவட்ட அளவில் ஒரு குழு அமைக்க அரசு அறிவுரை வழங்கியுள்ளது. கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து ஆலோசனை செய்து, தகுதி வாய்ந்த நபர்களை நியமிக்க உள்ளனர். இதன் மூலமாக, ஜல் ஜீவன் திட்டம் முறையாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
