ADDED : மார் 15, 2024 12:24 AM
முசரவாக்கம்:காஞ்சிபுரம் ஒன்றியம், முசரவாக்கத்தில் உள்ள தர்மராஜா சமேத திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த மகா உற்சவ பெருவிழா, கடந்த மாதம் 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி தினமும் மேல்பள்ளிப்பட்டு கிருஷ்ணமூர்த்தி குழுவினரின் மகாபாரத சொற்பொழிவு நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நெடும்பிறை பொன்னியம்மன் கலைமன்றத்தின் ஆசிரியர் துரை குழுவினரால், மார்ச் 2 முதல், தினமும் இரவு 10:00 மணிக்கு நாடகமும், தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடந்து வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, கடந்த 6ல் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.
இதில் 19ம் நாள் உற்சவமான கடந்த 12ல் காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் விமரிசையாக நடந்தது.
நேற்று முன்தினம் இரவு தருமர் பட்டாபிஷேகம் நாடகமும், தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது. இதை தொடர்ந்து, 20 நாட்களாக நடந்து வந்த, அக்னி வசந்த விழா நிறைவு பெற்றது.

