sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வல்லப்பாக்கத்தில் 'சிப்காட்' அமைக்கும் திட்டம்... ரத்தாகிறது  இழப்பீடு தொகை அதிகமாக இருப்பதாக தகவல்

/

வல்லப்பாக்கத்தில் 'சிப்காட்' அமைக்கும் திட்டம்... ரத்தாகிறது  இழப்பீடு தொகை அதிகமாக இருப்பதாக தகவல்

வல்லப்பாக்கத்தில் 'சிப்காட்' அமைக்கும் திட்டம்... ரத்தாகிறது  இழப்பீடு தொகை அதிகமாக இருப்பதாக தகவல்

வல்லப்பாக்கத்தில் 'சிப்காட்' அமைக்கும் திட்டம்... ரத்தாகிறது  இழப்பீடு தொகை அதிகமாக இருப்பதாக தகவல்


ADDED : ஜூலை 07, 2025 11:07 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : வல்லப்பாக்கம் கிராமத்தில் புதிதாக 'சிப்காட்' அமைக்க, நான்கு ஆண்டுகளாக நில எடுப்புக்கான பணிகள் நடந்த நிலையில், சிப்காட் அமைக்கும் முடிவை தொழில் துறை கைவிடுகிறது. அதேசமயம், தங்களது நிலங்களுக்கான தடையில்லா சான்று வழங்காததால், நிலத்தை வெளி நபருக்கு விற்க முடியாமல் அவதிப்படுவதாக நில உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், பிள்ளைப்பாக்கம் உட்பட ஏழு 'சிப்காட்' தொழிற்பூங்காக்கள், மூன்று 'சிட்கோ' தொழிற்பேட்டைகள் உள்ளன.

இவற்றின் வளாகத்தில், 1,500க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய அளவிலான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன; மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

போக்குவரத்து வசதி


ஆண்டுதோறும் 70,000 கோடி ரூபாய்க்கு, தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தி பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன.

சென்னைக்கு மிக அருகில் காஞ்சிபுரம் மாவட்டம் இருப்பதாலும், விமான நிலையம், துறைமுகம், நெடுஞ்சாலை போன்ற போக்குவரத்து வசதிகள் மேம்பட்டிருப்பதாலும், தொழில் முனைவோர் பலரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில் துவங்க முயல்கின்றனர்.

அதற்கு ஏற்ப, தமிழக அரசின் தொழில் துறை, சிப்காட் வாயிலாக நிலங்களை கையகப்படுத்தி, தொழிற்சாலைகளுக்கு நிலம் வழங்க ஏற்பாடு செய்கிறது.

அந்த வகையில், வாலாஜாபாத் அருகே, வல்லப்பாக்கம் கிராமத்தில், 120 ஏக்கர் பரப்பளவில், புதிதாக சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க, 2021ல் அறிவிப்பு வெளியிட்டது.

இது சம்பந்தமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, விவசாயிகளுடன் பேச்சு மேற்கொள்ளப்பட்டு, நில எடுப்புக்கான அதிகாரிகள் நியமனம் செய்வது உள்ளிட்ட பணிகளை, சிப்காட் நிர்வாகம் மேற்கொண்டு வந்தது.

மேலும், நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவர்களின் நிலங்களுக்கான இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால், அவர்களின் நிலங்களை விற்கவும், அடமானம் வைக்கவும் தடை விதிக்கப்பட்டு, பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

வல்லப்பாக்கம் கிராமத்தில் சிப்காட் அமைக்க முடிவு செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும், இழப்பீடு வழங்கப்படாமல் இருப்பதாக நில உரிமையாளர்கள், கலெக்டரிடமும், சிப்காட் அதிகாரிகளிடமும், முதல்வர் தனிப்பிரிவிலும் முறையிட்டு வந்தனர்.

தடையில்லா சான்று


இந்நிலையில், சமீபத்தில் நடந்த சிப்காட் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பின், வல்லப்பாக்கத்தில் சிப்காட் அமைக்கும் முடிவை கைவிட முடிவு செய்திருப்பதாக, நில உரிமையாளர்களுக்கு சிப்காட் நில எடுப்பு அதிகாரிகள் பதில் அளித்து வருகின்றனர்.

சிப்காட் அமைக்கும் முடிவை கைவிடும் நிலையில், அதற்கான அரசாணையை பிறப்பிக்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக நில உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.

வல்லப்பாக்கத்தில் சிப்காட் நடவடிக்கைகளை கைவிடுவதாக அரசாணை பிறப்பித்தால் தான், தடையில்லா சான்று வாயிலாக தங்களின் நிலங்களை வெளி நபர்களுக்கு விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ முடியும் என நில உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களின் நிலங்களை அரசும் எடுத்துக்கொள்ளாமல், தனியாரிடமும் விற்க முடியாமல், நில உரிமையாளர்கள் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, வல்லப்பாக்கம் சிப்காட் தொடர்பான நில எடுப்பு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'சிப்காட் அமைக்கும் முடிவு, நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவாகிஉள்ளது.

'நில நிர்வாக கமிஷனர், அரசுக்கு கோப்புகள் அனுப்பி, அங்கிருந்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். அரசாணை வந்தவுடன், நில உரிமையாளர்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்படும்' என்றார்.

என்னுடைய ஒன்றரை ஏக்கர் நிலத்தை சிப்காட் அமைக்க எடுத்துக்கொள்வதாக கூறி நான்கு ஆண்டுகள் காத்திருந்தேன். ஆனால், அரசும் நிலங்களை எடுக்கவில்லை. இப்போது சிப்காட் அமையவில்லை என்கின்றனர். என் நிலத்தை வெளிநபருக்கு விற்க தடையில்லா சான்று உடனே வழங்க வேண்டும். நிலத்தை விற்க முடியாமல், ஆண்டுக்கணக்கில் அவதிப்பட்டு வருகிறேன். தடையில்லா சான்று வழங்க நடவடிக்கை வேண்டும்.

- எஸ்.செல்வம்,

வல்லப்பாக்கம், வாலாஜாபாத்.

அதிக இழப்பீடு தொகை கேட்பு

வல்லப்பாக்கம் கிராமம், வாலாஜாபாத் அருகே அமைந்துள்ளது. இப்பகுதியில் சிப்காட் அமைந்தால், ஒரகடம் சிப்காட் வாயிலாக பல்வேறு வசதிகள் கிடைக்கும் என்பதால், இப்பகுதி இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், சிப்காட் அமைக்கும் முடிவு இப்போது கைவிடப்படுகிறது. இதற்கு, நில உரிமையாளர்கள் 1 ஏக்கருக்கு, 1 - 2 கோடி ரூபாய் வரை இழப்பீடு கேட்பதாகவும், அவ்வளவு பணம் தர இயலாது என்பதால், மாவட்ட அளவிலான கமிட்டி, அரசுக்கு தெரியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சிப்காட் அமைய தேர்வான இடம் அருகிலேயே ஏரி உள்ளது. ஏரி உயரமாகவும், சிப்காட்டுக்கான பகுதி தாழ்வாகவும் இருப்பதால் தொழில் துவங்க பலரும் யோசிப்பர் என்பதாலும், வல்லப்பாக்கம் சிப்காட் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக தொகை இழப்பீடு கேட்பதும், அருகிலேயே ஏரி ஒன்று இருப்பது போன்ற காரணங்களாலும் சிப்காட் முடிவை கைவிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.








      Dinamalar
      Follow us