/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லக்கோட்டை முருகனுக்கு திருக்கல்யாண உத்சவம்
/
வல்லக்கோட்டை முருகனுக்கு திருக்கல்யாண உத்சவம்
ADDED : அக் 19, 2025 09:37 PM

ஸ்ரீபெரும்புதுார்:வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஐப்பசி மாத திருக்கல்யாண உத்சவம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாளிக்கிறார்.
திருமண பிரார்த்தனை ஸ்தலமாக இக் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உத்சவம் நேற்று நடந்தது.
காலை 7:30 மணிக்கு, மயில் மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பலவித பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபராதனை நடந்தது.
காலை 9:30 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முருகன், மயில் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, தலைமை அர்ச்சகர் சந்திரசேகர குருக்கள் தலைமையில், 11:00 மணிக்கு வள்ளி, தெய்வானைக்கு மாங்கல்யதாரணம் நடந்தது.
அதை தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தனர். திருக்கல்யாண உத்சவ ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவராஜ், அறங்காவலர் குழு உறுப்பினர் செய்திருந்தனர்.