/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும் தி.மு.க., - அ.தி.மு.க.,வை விரட்ட வேண்டும்; தக்கலை 'ரோடு ஷோ'வில் அமித் ஷா பேச்சு
/
தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும் தி.மு.க., - அ.தி.மு.க.,வை விரட்ட வேண்டும்; தக்கலை 'ரோடு ஷோ'வில் அமித் ஷா பேச்சு
தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும் தி.மு.க., - அ.தி.மு.க.,வை விரட்ட வேண்டும்; தக்கலை 'ரோடு ஷோ'வில் அமித் ஷா பேச்சு
தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும் தி.மு.க., - அ.தி.மு.க.,வை விரட்ட வேண்டும்; தக்கலை 'ரோடு ஷோ'வில் அமித் ஷா பேச்சு
ADDED : ஏப் 14, 2024 03:18 AM
நாகர்கோவில் : ''தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., - அ.தி.மு.க.,வை ஓட ஓட விரட்டிவிட்டு பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்,'' என, தக்கலையில் நடந்த 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
கன்னியாகுமரி பா.ஜ., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து, தக்கலையில் இருந்து மேட்டுக்கடை வரை ரோடு ஷோ நடத்திய அமித் ஷா பேசியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியினர் பிரதமர் மோடிக்காக சிறப்பாக களப்பணி செய்து கொண்டிருக்கின்றனர். தமிழ் மொழி, பண்பாடு, தமிழகத்தின் மரியாதையை தேசம் முழுதும் மட்டுமல்ல; உலகம் முழுதும் கொண்டு செல்ல மோடி செயல்பட்டுக் கொண்டுஇருக்கிறார்.
தமிழில் பேச முடியவில்லை என எனக்கு வருத்தமாக இருக்கிறது. மூன்று, நான்கு ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் நான் தமிழில் பேச முயற்சிப்பேன். தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் ஊழல் செய்து, தமிழகத்தின் வளர்ச்ச்சியை தடுத்துக் கொண்டிருக்கின்றன. இக்கட்சிகளை ஓட ஓட விரட்டிவிட்டு, பா.ஜ.,-வுக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.
தி.மு.க.,வினர் சனாதன தர்மத்தையும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதையும் விமர்சித்து பேசி, கோடிக்கணக்கான மக்களின் மனதை காயப்படுத்தியுள்ளனர்.
நாம் அத்தனை பேரையும் நம்மோடு இணைத்து, வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டுஇருக்கிறோம். மோடி நம் நாட்டை பாதுகாப்பாகவும், வளர்ச்சியடைந்ததாகவும் எடுத்து சென்று கொண்டிருக்கிறார்.
மூன்றா-வது முறையாக மோடி பிரதமராக வரும்போது, மூன்றாவது முறையாக கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்து அனுப்பினால், தேசம் வளர்ச்சி பெறும்.
தமிழகத்தில் நான் செல்லும் இடமெல்லாம் பா.ஜ., இந்தியா முழுமைக்கும் 400 தொகுதிகளில் வெல்லும் என்கின்றனர். 400 சீட்டுகளை நாம் கடக்க வேண்டும். அது பொன்.ராதாகிருஷ்ணனையும் சேர்த்து தான் இருக்க வேண்டும்.
விளவங்கோடு சட்ட சபை இடைத்தேர்தலில் நந்தினியை வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

