ADDED : செப் 23, 2024 02:18 AM
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே தகராறில் மனைவியை கொலை செய்த 84 வயது கணவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சீதப்பாலை சேர்ந்தவர் அலெக்சாண்டர் 84. முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ரோஸ்லின் 78. ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு டேனியல் என்ற மகனும், ஷீபா என்ற மகளும் உள்ளனர்.
அமெரிக்காவில் ஆசிரியைப் பணி செய்து வரும் ஷீபா, சொந்த ஊரான சீதபாலில் புதிதாக வீடு கட்டி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து வந்த அலெக்சாண்டரும், ரோஸிலினும் மகள் ஷீபாவின் வீட்டில் வசித்து வந்தனர். மாடியில் ஷீபாவின் கணவர் ரஞ்சித் வசித்து வந்தார்.
அலெக்சாண்டருக்கும் ரோஸ்லினுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அலெக்சாண்டர் மனைவியை சுத்தியலால் தாக்கினார். இதில் கீழே விழுந்த அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார்.
அலெக்சாண்டரை ஆரல்வாய் மொழி போலீசார் கைது செய்தனர். குடிப்பழக்கம் கொண்டிருந்த அலெக்சாண்டரை மனைவி சரிவர கவனிக்காதது தான் குடும்ப பிரச்னைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.