/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் குற்றப்பிரிவில் போலீசார் பற்றாக்குறை
/
கரூர் குற்றப்பிரிவில் போலீசார் பற்றாக்குறை
ADDED : ஏப் 25, 2024 04:56 AM
கரூர்: கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் (சட்டம்- ஒழுங்கு) பின்புறம், சிறிய இரண்டு அறைகளில், குற்றப்
பிரிவு போலீஸ் ஸ்டேஷன் தனியாக இயங்கி வருகிறது. அதில், இன்ஸ்பெக்டர் என தனியாக இல்லை. சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டரே பொறுப்பாக உள்ளார். மேலும், குற்றப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட போலீசாரை விட, குறைந்தளவில் போலீசார் தற்போது பணியில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், தலைநகரமாக உள்ள கரூர் சரக பகுதிகளில் நடக்கும் கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகள் குறித்து, கரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க செல்லும் பொதுமக்களை, 'பின்னால போங்க' என, சட்டம்--ஒழுங்கு போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். ஆனால், குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், உள்ள போலீசார் பல்வேறு பணிகளுக்காக வெளியே சென்று விடுகின்றனர். ஏற்கனவே பணம், தங்க நகைகளை இழந்து மன உளைச்சலோடு, புகார் கொடுக்க செல்லும் பொது மக்களுக்கு கூடுதல் மன உளைச்சல் ஏற்படுகிறது.
வெளியில் சென்ற, குற்றப்பிரிவு போலீசார் எப்போது திரும்பி வருவார்கள் என்ற விபரம் தெரியாததால், புகார் கொடுக்க வரும் பொது மக்கள் பலமணி நேரம் காத்திருக்கின்றனர். இதில், சிலர் புகார் கொடுக்காமலே திரும்பி சென்று விடுகின்றனர்.
சில நேரங்களில் பொதுமக்கள் தரும் புகாரை, குற்றப்பிரிவு போலீசார் பெற்றுக் கொண்டாலும், உடனடியாக எப்.ஐ.ஆர்., போடுவதில்லை. பலத்த சிபாரிசுக்கு பிறகு தான், புகார் மனு ஏற்பு சான்றே, பணம் மற்றும் தங்க நகைகளை இழந்த புகார்தாரருக்கு, கரூர் குற்றப்பிரிவு ஸ்டேஷனில் தரப்படுகிறது. இதனால், புகார் செய்ய வரும் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
எனவே, கரூர் குற்றப்பிரிவு அலுவலகத்தில், பொது மக்கள் தரும் புகாரை உடனடியாக பெற்றுக் கொள்ள வசதியாக, எந்த நேரமும் பணியில் இருக்க கூடிய வரவேற்பாளர் பணியிடத்தை ஏற்படுத்தி இன்ஸ்பெக்டரை தனியாக பணியமர்த்த வேண்டும்.
மேலும், கொள்ளை, திருட்டு தொடர்பான புகாரை உடனுக்குடன் விசாரிக்க, கரூர் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், கூடுதல் போலீசாரை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

