/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மரங்கள் அழிப்பால் பசுமையை இழந்த ஓசூர் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம்
/
மரங்கள் அழிப்பால் பசுமையை இழந்த ஓசூர் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம்
மரங்கள் அழிப்பால் பசுமையை இழந்த ஓசூர் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம்
மரங்கள் அழிப்பால் பசுமையை இழந்த ஓசூர் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம்
ADDED : மே 04, 2024 01:27 AM
ஓசூர்:தமிழகத்தின் எல்லையான ஓசூரில் எப்போதும் குளிர்ந்த காலநிலை நிலவும். ஏப்., மே மாதங்களில் கூட பெரிய அளவில் வெயிலின் தாக்கம் இருக்காது. ஆனால், தற்போது காலநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில், ஓசூர் பகுதியில் கிட்டத்தட்ட, 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி வருகிறது. ஓசூர் தொழிற்சாலை நகரமாக இருந்தாலும், இங்கு நிலவும் சீர்தோஷண நிலையை வைத்து, மக்கள் பலர் நிலங்களை வாங்கினர். வீடுகளை கட்டி குடியேறினர்.
ஆனால் தற்போது, நிலைமை மாறிவிட்டது. ஓசூரின் காலநிலை மாறி விட்டது. வளர்ந்து வரும் தொழில் நகரான ஓசூரின் போக்குவரத்து தேவையை கருதி, ஓசூர் - தளி சாலை, ஓசூர் இ.எஸ்.ஐ., ரிங்ரோடு, மத்திகிரி - டி.வி.எஸ்., கம்பெனி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.
இது தவிர, கர்நாடகா - தமிழகத்தை இணைக்கும் வகையில், சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு, தர்மபுரியில் இருந்து ராயக்கோட்டை, ஓசூர் வழியாக, கர்நாடகா மாநிலம் நெல்லுார் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
இதற்காக, சாலையோரம் மற்றும் ஓசூர் நகரில் பல ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இதனால், ஓசூர் நகரம் பசுமையை இழந்து தவிக்கிறது.
மேலும், ஓசூரை சுற்றியுள்ள மலைகள் கனிமவளத்திற்காக வெட்டப்பட்டு, கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தப்பட்டுள்ளன. மேலும், தொழிற்சாலைகள் பெருக்கம் போன்ற காரணங்களால், ஓசூர் தன் வழக்கமான காலநிலையை இழந்து வருகிறது.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இன்னும் சில ஆண்டுகளில் ஓசூர் வாழ்வதற்கு தகுதி இல்லாத நகராக மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சாலையோரம் வெட்டப்படும் ஒரு மரத்திற்கு பதில், 10 மரங்களை நட வேண்டும் என்ற அரசு விதி உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை வனத்துறைக்கு பணத்தை செலுத்துகிறது. வனத்துறையும் ஆங்காங்கு நடுகிறது. ஆனால், அவற்றில் சொற்ப அளவில் மட்டுமே மரங்களாக வளருகின்றன. மரங்கள், மலைகள் அழிப்பு, தொழிற்சாலைகள் அதிகரிப்பு போன்ற காரணத்தால், காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மழை பொய்த்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் சரிந்து விட்டது. இதனால் ஓசூர் தன் பொழிவை இழந்து, வெப்பத்தால் சிக்கி தவிக்கிறது.
இவ்வாறு கூறினர்.