/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டெட்டனேட்டர் வெடித்து சகோதரர்கள் படுகாயம்
/
டெட்டனேட்டர் வெடித்து சகோதரர்கள் படுகாயம்
ADDED : ஜூலை 06, 2024 02:50 AM
ஓசூர்:கெலமங்கலம் அருகே, டெட்டனேட்டர் வெடித்ததில், சகோதரர்கள் காயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த தடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் - தனலட்சுமி தம்பதியருக்கு மாதேவன், 15, பைரவன், 13, என இரு மகன்கள் உள்ளனர். அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாதேவன் பத்தாம் வகுப்பும், பைரவன், எட்டாம் வகுப்பும் படிக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை, அண்ணன், தம்பி இருவரும் கிராமத்தை ஒட்டியுள்ள கல்குவாரி அருகே விளையாட சென்றனர்.
அங்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், பையில் வைக்கப்பட்டிருந்த தாயத்து போன்ற ஒரு பொருளை எடுத்தனர். அது டெட்டனேட்டர்என்பதை அறியாத பைரவன், கல்லால் அடித்து உடைக்க முயன்றுள்ளார். அது முடியாததால், பைரவனை பிடிக்குமாறு கூறி, மாதேவன் கல்லால் அடிக்க டெட்டனேட்டர் வெடித்து சிதறியது. இதில் மாதேவனுக்கு இரு கைகளிலும், பைரவனுக்கு இடது கையிலும் காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி தலைமையில், கெலமங்கலம் போலீசார் கல்குவாரியில் விசாரணை நடத்தினர். உரிய அனுமதி பெற்று தான், கல்குவாரியில் பாதுகாப்பாக வெடி மருந்துகள் வைக்க வேண்டும். எந்த பாதுகாப்பும் இல்லாமல், கல்குவாரி வெடி மருந்து எப்படி வெளியே கிடந்தது என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.