/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் வனத்திற்கு 40 யானைகள் இடப்பெயர்ச்சி
/
ஓசூர் வனத்திற்கு 40 யானைகள் இடப்பெயர்ச்சி
ADDED : நவ 20, 2025 02:13 AM
ஓசூர்: கர்நாடகா மாநிலத்திலிருந்து, 40க்கும் மேற்பட்ட யானைகள், ஓசூர் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.
கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனத்திலிருந்து, ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில், 40க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக எல்லையான ஓசூர் வனக்கோட்டத்திற்கு இடம் பெயர்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான இடப்பெயர்வு துவங்கிய நிலையில், தமிழக எல்லையான ஜவளகிரி வனச்சரகத்திற்கு இடம் பெயர்ந்த, 40க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை வழியாக ராயக்கோட்டை வனச்சரக, ஊடேதுர்க்கம் காப்புக்காட்டிற்கு சில நாட்களுக்கு முன் சென்றன.
அங்கிருந்து, நேற்று முன்தினம் இரவு வெளியேறி, நேற்று காலை ஓசூர் வனப்பகுதிக்கு சென்றன. எந்த நேரத்திலும் யானைகள் கூட்டம், ஓசூர் - ராயக்கோட்டை சாலையை கடந்து, போடூர்பள்ளம் வனத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, கெலமங்கலம் - உத்தனப்பள்ளி சாலையிலுள்ள போடிச்சிப்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியை ஒட்டிய வனத்தில், ஒற்றை யானை முகாமிட்டுள்ளது.
இரவில் அந்த யானை, அஞ்செட்டி துர்க்கம், இருதாளம், நெருப்புக்குட்டை, காடு உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன் கனிக்கோட்டை வனச்சரகம், மூக்கங்கரை வனத்தில், அழுகிய நிலையில், 18 - 20 வயதுடைய ஆண் யானை இறந்து கிடந்தது.
நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அங்கு சென்று, யானையின் சடலத்தை மீட்டு விசாரித்தனர். அருகிலுள்ள பாறையில் இருந்து தவறி விழுந்து யானை உயிரிழந்தது தெரிந்தது.

