/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் தனி நபர்கள் ஆதிக்கம் மலர் வணிக வளாகத்தை ஒப்படைக்காததால் வருவாய் இழப்பு
/
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் தனி நபர்கள் ஆதிக்கம் மலர் வணிக வளாகத்தை ஒப்படைக்காததால் வருவாய் இழப்பு
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் தனி நபர்கள் ஆதிக்கம் மலர் வணிக வளாகத்தை ஒப்படைக்காததால் வருவாய் இழப்பு
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் தனி நபர்கள் ஆதிக்கம் மலர் வணிக வளாகத்தை ஒப்படைக்காததால் வருவாய் இழப்பு
ADDED : ஜன 30, 2025 02:26 AM
ஓசூர்:ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் பக்தர்களை தனி நபர்கள் அதிகாரம் செய்து வருகின்றனர். கோவில் நிலங்கள் குத்தகைக்கு விட்ட விபரங்கள், பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்படாமல் மறைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் மூலம் திறக்கப்பட்ட மலர் வணிக வளாகம், வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படாததால், பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை ஆகிய நான்கு தாலுகாக்களில், 403 கோவில்கள் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. வருவாய் அடிப்படையில் கோவில்கள் பல்வேறு கிரேடுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
வருவாய்
ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலுக்கு ஆண்டுக்கு, ஒன்றரை கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. இந்த கோவிலுக்கு, ஓசூர் சுற்றுவட்ட கிராமங்களில் பல ஏக்கர் நிலம் உள்ளது. இவை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன.
கோவில் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்ட விபரங்கள், கோவிலில் பக்தர்கள் பார்வைக்கு எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், யாருக்கு, எத்தனை ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என்ற விபரத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை எழுதி வைக்காமல் ரகசியம் காக்கிறது.
குத்தகை எடுத்தவர்கள் சரியாக பணம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இது மட்டுமின்றி, கோவிலில் மொத்தம் ஆறு பேர் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். அவர்கள் சீருடை, பேட்ஜ் என எதுவும் அணியாமல், சாதாரண உடையில் வலம் வருகின்றனர். மேலும், தனிநபர்கள் கோவிலுக்குள் வந்து, பக்தர்களை அதிகாரம் செய்கின்றனர். கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. இதுவே, பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
முதல்வர் திறப்பு
அதுபோல, ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காளிகாம்பாள் காமாட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், கோவில் நிதியில் இருந்து 76 லட்சம் ரூபாய் மதிப்பில், 98 திண்டு கடைகளுடன் கூடிய மலர் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மூலம் கடந்தாண்டு நவம்பரில் அந்த கடைகள் திறக்கப்பட்டன. அவை, இன்று வரை ஏலம் விடப்பட்டு வியாபாரிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளதால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
இது குறித்து விளக்கம் கேட்க, கிருஷ்ணகிரி ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமுவேலை தொடர்பு கொண்டு கேட்ட போது, ''உங்களை தேடி, உங்கள் ஊரில் நிகழ்ச்சியில் உள்ளேன். கலெக்டரிடம் அறிக்கை கொடுத்து விட்டு, உங்களை நானே தொடர்பு கொள்கிறேன்,'' என்றார்.
அதன் பின் அவர் தொடர்பு கொள்ளவில்லை.

