/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மொபைல் சிக்னல் கிடைக்காமல் சிரமப்பட்ட மக்களுக்காக பி.எஸ்.என்.எல்., டவர் திறப்பு
/
மொபைல் சிக்னல் கிடைக்காமல் சிரமப்பட்ட மக்களுக்காக பி.எஸ்.என்.எல்., டவர் திறப்பு
மொபைல் சிக்னல் கிடைக்காமல் சிரமப்பட்ட மக்களுக்காக பி.எஸ்.என்.எல்., டவர் திறப்பு
மொபைல் சிக்னல் கிடைக்காமல் சிரமப்பட்ட மக்களுக்காக பி.எஸ்.என்.எல்., டவர் திறப்பு
ADDED : அக் 15, 2024 07:05 AM
ஓசூர்: சூளகிரி அருகே, மொபைல் சிக்னல் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்ட நிலையில், பி.எஸ்.என்.எல்., சார்பில் மொபைல் டவர் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காளிங்கவரம் பஞ்.,க்கு உட்பட்ட சின்ன மட்டமபள்ளி, அக்ரஹாரம், காளிங்கவரம், கொடிதிம்மனப்பள்ளி, ஜெவுக்குபள்ளம், தின்னுார், குருமூர்த்தி கொட்டாய் உட்பட, 7 கிராமங்கள் உள்ளன. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி, துணை சுகாதார நிலையம், தமிழ்நாடு கிராம வங்கி, தபால் நிலையம், மக்கள் சேவை மையம் உட்பட பல வசதிகள் உள்ளன. ஆனால், வனப்பகுதியை ஒட்டிய இக்கிராமங்களில் மொபைல்போன் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை.
இதனால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கூட போன் செய்ய மக்கள் சிரமப்பட்டனர். இணையதள வசதி சரியாக கிடைக்காததால், கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க, மேல்நிலை தொட்டி மீது மாணவ, மாணவியர் அமர்ந்து பாடம் படித்தனர். உறவினர்கள், நண்பர்கள் என யாரையும் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. எனவே, மொபைல் டவர் அமைக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதையேற்று, காளிங்கவரம் கிராமத்தில் பி.எஸ்.என்.எல்., சார்பில் மொபைல் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இதை, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று திறந்து வைத்தார். இதனால், 7 கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மாவட்ட கலெக்டர் சரயு, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, சப் கலெக்டர் பிரியங்கா, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், தி.மு.க., இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.