
பேரையூர்: பேரையூர் அருகே கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு, விபத்து ஏற்படும் அளவு பலமிழந்த பாலத்தை பராமிரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
பேரையூர் -- வத்ராயிருப்பு சாலையை மாநில நெடுஞ்சாலைத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
இந்தச் சாலை போக்குவரத்து நிறைந்த பிரதான சாலையாக உள்ளதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் தும்மநாயக்கன்பட்டி அருகே பாலம் ஒன்று உள்ளது. பாலத்தின் மீதான ரோட்டில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. இந்த பாலம் சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாலம் கட்டிய சிறிது காலங்களிலேயே கான்கிரீட் உடைந்து கம்பிகள் வெளியே ;நீட்டியபடி உள்ளன. இதனால் வாகனங்கள் பாலத்தை கடக்கும் போது மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
ஆபத்தான நிலையில் இருக்கும் இப்பாலத்தை சரி செய்ய நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

